பெண்கள் தினம்
பூக்கள் தப்பித்துச் சென்றுவிடுமென்று
வேலி கட்டுவதில்லை
மதில் சுவர்கள் வீட்டிலுள்ளவர்கள்
தாண்டிச் செல்வதை முறியடிக்க எழுப்புவதில்லை
எம் வீட்டுப் பெண் குழந்தைகளுக்கு
வரையறை வகுப்பது அவர் தம் மீதான
நம்பிக்கையின்மையல்ல
கேள்விப்படும் சமூக சங்கடங்கள்
வீட்டில் நுழையாமல் இருக்கவே கட்டுப்பாடுகள்
என் போன்ற தாய்மார்கள்
பெண் பிள்ளைகளை வளர்க்கும்
பீதியிலிருந்து விடு்படும்
பாதுகாப்பான நாளே
பெண்கள் தினம்
மறைவின் நிஜங்கள்
ஆசையோடு
நீ வாங்கி வந்த
பென்ஸ் கார்
கொளுத்தும் வெயிலில்
காத்திருக்கிறது
நீ வந்தமர்ந்து
குளிர வைப்பாயென.
அதனிடம் நான்
சொல்லவில்லை
நீ விமான விபத்தில் மறைந்து
என் எண்ணங்களை
வியாபித்திருக்கிறாயென
நீ இல்லாமலிருப்பது
தெரிந்தால்
சுட்டெரிக்கும் வெப்பத்தை
சாதகமாக்கிக் கொண்டு
அது பொசுங்கிவிட்டாலும்
ஆச்சர்யப்படுவதற்கில்லை
குறையேதுமில்லை
புத்தகம் வாசித்துக் கொண்டிருப்பேன்
புகையாத அடுப்பை புகைவதாக சொல்லி
வீசியெறிவாய் புத்தகத்தோடு சேர்த்து என்னையும்
மடிக்கணினியை உலவிக் கொண்டிருப்பேன்
மவுனத்தில் உன் வெறுப்பை சொல்லி
மடக்கி வைப்பதோடு அடக்கி வைப்பாய் மகிழ்வையும்
அமைதியான படங்களை பார்த்துக் கொண்டிருப்பேன்
அடிதடி இல்லாத அழுமூஞ்சிப்படமென்று
அணைத்தே விடுகிறாய் ஆசைகளையும்
உனக்கு வேண்டியதை மட்டும் உரியவனென்று
உலுக்கி பெறுகின்றாய்
உகந்ததை தரவே செய்கின்றேன்
உள்ளம் ஒன்றாமல்
எனக்குப் பிடித்ததெல்லாம் உனக்கும்
உனக்குப் பிடிப்பதெல்லாம் எனக்கும்
பிடிக்காமல் போனாலும்
சொல்லத்தான் செய்கிறோம்
ஒன்றாய் வாழ்கிறோமென்று
எல்லாம் யாருக்காக?
என் வயதொத்த
பிள்ளைகள்
கனவின் நடுவிலிருக்க
நான் நித்திரை விட்டு
குளிர் நடுக்கத்தில்
முக்காடில் நுழைந்து
மதரஸா விரைந்தேன்
புரியாத அரபி கற்க
அம்மம்மா மெச்சுதலுக்காக.
அழைப்பு விடுத்தவுடன்
கண்ணாமூச்சியில்
கண்கட்டவும் மறந்து
புரியாமல் மனனம் செய்த
பாடங்களை ஒப்பித்தபடி
தொழுதேன்
அன்புடன் அணைத்துக் கொள்ளும்
அப்பாவுக்காக
விதவிதமான ஆடையில்
தோழிகள்
பள்ளி விழாவிற்கு
பவனி வர
வெதும்பிய மனதை
ஹிஜாபில் ஒளித்தேன்
பெருமையுடன் முகர்ந்து முத்தமிடும்
அம்மாவுக்காக
விவரம் தெரியாத வயது ஓய்ந்து
பொருள் புரியாத மொழி
புலப்பட்டதும்
அறிந்து கொண்டேன்
ஓதலும், தொழுகையும், ஹிஜாபும்
நிலையில்லா உறவுக்காக அல்ல
ஒழுக்கத்தை விரும்பும்
இறைவா எல்லாம்
உனக்காகவென்று.
ஆசிரியர் தின வாழ்த்து
தமிழ் எழுத்தை
கற்றுத் தந்த நீங்கள்
இன்று எங்கு இருக்கிறீர்கள்?
தினமும் ஒரு திருக்குறளென
இரு வரியை மனனம் செய்து
உரையை விவரித்த நீங்கள்
இன்று எங்கே இருக்கிறீர்கள்?
விதையை விதைத்துவிட்டு
விருட்சத்தின் வளர்ச்சியை
காணாமல்
எங்கு சென்றுவிட்டீர்கள்?
எங்களின்
முதல் சொல்
முதல் வாக்கியம்
முதல் சிந்தனை
முதல் கற்பனை
முதல் உளறல்
முதல் கவிதை
முதல் சந்தேகம்
என்று எல்லாமே
முதலில் பிறந்தது உங்களிடம்தானே?
முயற்சி, தன்னம்பிக்கை
போராட்டம், கடமை,
ஒழுக்கம், திறமை
என்று இல்லாதவற்றையும்
தோண்டி ஊற்றை
எங்களுக்குள் எடுத்த நீங்கள்
எங்களுக்கெல்லாம் முன்மாதிரியாக
இருந்த நீங்கள்
இன்று எங்கு சென்றுவிட்டீர்கள்?
உங்களுக்காக எழுதுகிறேன்
என்றதும் சின்னபிள்ளையாகவே
மாறிவிட்டேன்.
இந்த எளியவளை
ஏணியாக நின்று உயர்த்திவிட்டு
நீங்கள் மட்டும் அதே இடத்தில்
இருப்பதுதான்
ஆசிரிய தர்மமா?
எங்கிருந்தாலும் என்
ஆசிரியர் தின வாழ்த்தை
பெற்றுக் கொள்ளுங்கள்