இதப் பார்த்தாவது திருந்துவாங்களா?

குறும்படமென்றாலே எனக்கு தரமணி எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் நான் பணி புரியும் போது என் சக ஊழியர்களால் எடுக்கப்பட்ட பெண்ணியம் தொடர்பான ‘சும்மா’, பள்ளி படிப்பின் பாரத்தை பற்றிய ‘இந்த பாரம் தேவையா’ போன்ற கருத்தாழமிக்க படங்கள்தான் நினைவுக்கு வரும். பல மாதங்களுக்கு முன்பு தமிழனில் ஒளிபரப்பிய குறும்படம் பற்றிய கருத்தரங்கம் மீண்டும் குறும்படங்கள் மீது ஆர்வம் வர ஒரு உந்துதலாகயிருந்து, அந்த கருந்தரங்கில் பேசப்பட்ட சில படங்களை இணையத்தில் தேடிப்பிடித்து பார்த்தேன். ‘மனுஷி’, ‘தனியொரு மனிதனுக்கு’, ‘குப்பை’, ‘இளைஞா’, ‘ஒரு மரம் நிழலை தேடுகிறது’, ‘உயிரே உயிரே’, ‘செருப்பு’, இன்னும் பல கிடைத்தது.

குறும்படம் ஏறத்தாழ ஒரு நல்ல கவிதை வடிவம் பொருந்தியது, ஒரு கருப்பொருளை மையமாக கொண்டு அதனை அழுத்தமாக விளங்கச் செய்து நம்மை வெவ்வேறு கோணங்களில் சிந்திக்க வைக்கும் வல்லமைக் கொண்டது, சிலது விழிப்புணர்வூட்டும், சிலது மனிதத்தைத் தோண்டும். நான் பார்த்த அந்த தொலைக்காட்சி கருத்தரங்கில் குறும்படம் எடுத்தவர்களின் அனுபவங்களின் பகிர்வு, அவரவர்களுக்கு பிடித்த குறும்படத்தை பற்றிய விவரிப்பு, விளம்பரப் படத்திற்கும் குறும்படத்திற்கும் உள்ள வேறுபாடு, குறும்படத்தைக் கையாளும் யுக்தி என்று சில பிரபலங்களால் விவாதிக்கப்பட்டது. அதில் ‘விஷுவல் மீடியா’ படிக்கும் ஒரு மாணவரும் அடக்கம். தமது படிப்பிற்கு இத்தகைய படங்கள் எங்ஙனம் உதவுகிறது என்றும் விளக்கினார். சில மாதங்களுக்கு முன்பு வலைப்பதிவாளர்களுக்காக மலைநாடன் நடத்திய குறும்படப் போட்டியில் எம் வலைப்பதிவர்களும் உற்சாகமாக கலந்துக் கொண்டு பரிசுப் பெற்றது பெருமைக்குரிய விஷயமாகப்பட்டது. பாலபாரதி தனது செல்பேசியிலேயே எடுத்து ஒலி சேர்த்திருந்த திறனும் அவர் கையாண்டிருந்த தலைப்பும் பிரமிக்க வைத்தது. அவரைப் போல பல பதிவர்கள். சமீபத்தில் மங்கையின் குறும்படம் பற்றிய பதிவும் மகிழ்ச்சியளித்தது. குறும்படம் பற்றி பேச, ஒரு பதிவாக எழுத துளிர் விடச்செய்தது இசாக்கின் ‘ஒரு குடியின் பயணம்’ தான் என்று சொல்லலாம்.


தனது வலைப்பூவை வடிகாலென்று பலர் சொல்லிக் கொண்டாலும் பின்னூட்டத்தின் எண்ணிக்கையில் பதிவின் எடையை நிறுத்திப் பார்க்கும் பலருக்கு மத்தியில் பின்னூட்ட பெட்டியே இல்லாமல் உண்மையிலேயே வலைப்பூவை வடிகாலாக வகுத்துக் கொண்ட இசாக்கை நமக்கெல்லாம் ஒரு சக பதிவராக நல்ல கவிஞராக தெரியும் ஆனால் குறும்படம் எடுக்கக் கூடிய ஆவலை தேக்கி வைத்து ஒரு நல்ல படத்தை தரக்கூடியவர் என்று நேற்று அந்த படத்தை வெளியிட்டு திரையிடும் வரையில் தெரிந்திருக்கவில்லை எனக்கு.

அமீரகத்தில் வாழும் ஒவ்வொருவரும் விடுமுறையை எதிர்நோக்கி வருடம் முழுவதும் உழைக்க, கிடைத்த ஒரு மாத விடுமுறை இடைவேளையையும் இதற்காக பயன்படுத்திய அவரைப் பாராட்டும் முன்பு அதனைப் பொறுத்தருளிய அவர் மனைவிக்குத்தான் பாராட்டுகள் அனைத்தும். கடை தேங்காயை வழிப்பிள்ளையாருக்கு உடைத்த கதையாக இசாக்குக்கு சேர வேண்டிய பாராட்டை முழுவதுமாக அவர் மனைவிக்கு தந்தமைக்கு காரணமில்லாமலில்லை. ஒரு கலைஞனுக்கு அவன் மனதிற்கேற்ப சிறந்த படைப்பைத் தர தனது துணை அந்த படைப்பில் பங்குபெற வேண்டுமென்று அவசியமில்லை தேவையான மனநிம்மதியும் அவருக்கு பக்கபலமான இடையூறில்லாத வார்த்தையும்தான் அவரை உயரத்திற்கே அழைத்து செல்லும். அந்த வகையில் இசாக் அதிர்ஷ்டசாலிதான்.

பத்து நிமிடத்தில் தான் சொல்ல வந்த கருத்தை ஆழமாக பதித்திருக்கிறார் – காட்சியாக மட்டுமில்லை நம் மனதிலும். ஒரு குடியின் பயணமென்றதும் பலரும் ஒரு குடிகாரன் குடித்தே தன்னை அழித்துக் கொள்ளும் ஒரு படத்தை எதிர்பார்ப்பார்கள். அப்படியில்லாமல் ஒரு குடிகாரனால் அவனைச் சுற்றியுள்ளவர்களின் பாதிப்பை அழகாக வடித்துள்ளார். குடியைவிட அந்த படத்தில் எனக்கு அதிகம் தென்பட்டது ஒரு பெண்ணின் அறியாமைதான். எப்படி ஒரு பெண் தன் கணவனைச் சார்ந்தவளாக இருப்பின் அவனுடைய குடியையும் தாங்கிக் கொண்டு தன் வாழ்வின் அர்த்தமாகக் கருதும் தன் குழந்தையையும் இழக்கிறாள் என்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. குடிகார கணவனால் குழந்தையை இழந்த தருணத்தில் அவனை உதாசீனப்படுத்துவதற்கு பதிலாக, குடி வீட்டில் குடிபுகுந்தவுடன் அவள் அவனை அலட்சியப்படுத்தினாலே குடி எந்தக் குடியையும் கெடுத்துவிட முடியாது. இந்த படத்தைப் பார்க்கும் ஒரு குடிகாரனுக்கு தாக்கம் ஏற்படுமோ இல்லையோ குடிகாரர்களின் மனைவிமார்கள் அந்தப் பெண்மணியின் அழுகையின் ஓலத்தைக் காதில் வாங்கும் போது கண்டிப்பாக தனக்கும் இப்படியொரு கதி ஏற்படுமோ என்று ஈரக்குலை நடுங்கத்தான் செய்வார்கள். அதற்காகவாவது இந்தப் படத்தை அமீரகத்தில் வெளியிட்டதோடு நிறுத்திக் கொள்ளாமல் கிராமங்களுக்கும் சென்றடைய வேண்டுமென்று ஆசைப்படுகிறார் இசாக்.

அமீரகத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் திரையிடவும் கேட்டுக் கொண்டார். எனக்குத் தெரிந்து அமீரகத்தில் மக்கள் குடிப்பார்கள். ஆனால் குடிகாரனாக குடியையே மறப்பவர்கள் அமீரகத்தில் சொற்பமென்பதால் அதனை இங்கு திரையிடுவதற்கு மாறாக தமிழகத்திலென்று மட்டுமில்லாமல் இந்தியாவில் பல்வேறு கல்லூரிகளில் சமூகவியல், ‘விஷுவல் கம்யூனிகேஷன்’, ‘மாஸ்மீடியா’ துறைகளில் படிக்கும் மாணவர்களுக்கு காண்பித்து அவர்கள் நடத்தும் கிராமப்புற பட்டறைகளிலும், நகர்புற சேவைகளிலும் போட்டுக் காண்பிப்பதோடு நிறுத்திவிடாமல் என்ன புரிந்தது என்று அவர்களுக்கிடையே கருத்து பரிமாற்றம் நடத்தி விழிப்புணர்வு கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.

அந்தப் படத்தை பார்க்கும் போது ஒரு இயக்குனராக நடித்த கதாபாத்திரத்திலிருந்து தேவையான திருப்தியான உணர்வுப்பூர்வமான நடிப்பை, சரியான முகபாவத்தை கரக்கவில்லையென்ற குறைபாடு இருந்த போதும் கூட அதனைப் பின்னணி குரல்களும் காட்சியமைப்புகளும் ஒவ்வொரு நகர்வுகளும் திருப்தியளித்து ஈடுகட்டுவதாக இருந்தது. அவர் பேசும் போதுதான் ஒரு பத்து நிமிட படத்திலும் இருக்கும் சிரமத்தை, கட்டுப்பாட்டை உணர முடிந்தது. பத்து நிமிட படத்திற்கே இப்படியென்றால் ஒரு முழு நீளப்படத்தையெடுக்க எவ்வளவு மேடு பள்ளங்கள் கடக்க வேண்டியிருக்கும்!?

பலகோடி மணிநேரங்கள், கோடிக் கணக்கில் பணமென்று செலவிடும் வீணாப்போன இயக்குனர்கள் கிடைத்த வாய்ப்பை ஒரு நல்ல படம் தர முயற்சிக்காமல் வியாபார மயமாக்கல் என்று மட்டும் மனதில் விதைத்துக் கொண்டு உருப்படாமல் ஒரு படம் தருவதற்கு பதிலாக இப்படிப்பட்ட நல்ல குறும்பட இயக்குனர்களைக் கொண்டு பல குறும்படங்களை தந்தால்தான் என்ன?

By | 2008-01-05T10:20:00+00:00 January 5th, 2008|குறும்படம்|25 Comments

25 Comments

  1. Kalaban Partha January 5, 2008 at 5:36 pm - Reply

    Why don’t you describe each short film. Also which film you admire the most.

    Kalaban Partha

  2. நான் திருந்திட்டேன்!

  3. ஜெஸிலா January 6, 2008 at 6:31 am - Reply

    ஏற்கெனவே பதிவு ரொம்ப பெரிசா போயிடுச்சு, ஒவ்வொரு படத்தையும் விவரிச்சிருந்தா அவ்வளவுதான். இன்னொரு நாள் சொய்வோம் சரியா
    கலாபன் பார்த்தா.

    திருந்திட்டீங்களா குட்டிபிசாசு. ஹப்பா ஒருத்தராவது திருந்தியிருக்கீங்களே ரொம்ப நன்றி. 🙂

  4. cheena (சீனா) January 6, 2008 at 8:37 am - Reply

    //ஒரு கலைஞனுக்கு அவன் மனதிற்கேற்ப சிறந்த படைப்பைத் தர தனது துணை அந்த படைப்பில் பங்குபெற வேண்டுமென்று அவசியமில்லை தேவையான மனநிம்மதியும் அவருக்கு பக்கபலமான இடையூறில்லாத வார்த்தையும்தான் அவரை உயரத்திற்கே அழைத்து செல்லும்.//

    சத்தியமான வார்த்தைகள்.

  5. பாச மலர் January 6, 2008 at 8:37 am - Reply

    நல்ல செய்தி அறிய வைத்தீர்கள் ஜெஸிலா..படைப்பாளிகளுக்குப் பாராட்டுகள்

  6. கண்மணி January 6, 2008 at 8:38 am - Reply

    அம்மாடி ஜெஸி உனக்கு ரொம்பத்தான் பேராசை ரீமிக்ஸ் படமும் பாடலும் எடுக்கவே இவங்களுக்கு நேரமில்லை.இதுல குறும்படமா?

  7. முபாரக் January 6, 2008 at 11:33 am - Reply

    நல்ல பதிவு! நன்றி ஜெஸீலா

    பத்தே நிமிடத்தில் இத்தனை நிறைவாக குறும்படம் எடுத்த நண்பர் இசாக் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!!

  8. ஜெஸிலா January 6, 2008 at 12:43 pm - Reply

    பாசமலர், நீங்க யாருடைய பாசமலர் தங்கச்சி :-)). புதிய பெண் பதிவர்களை கண்டாலே ஆனந்தம் தான்.

    நல்லா சொன்னீங்க கண்மணி, என்னத்ததான் ரீமிக்ஸ் செஞ்சாலும் எதுவுமே ஒரிஜினல் போல அமையறதில்ல. அத தெரியாம இந்த வெளங்காவெட்டிங்க மாங்கு மாங்குன்னு உருப்படாத படங்களா எடுத்து தள்றாங்க.

    நன்றி முபாரக்.

  9. karthik January 7, 2008 at 7:14 am - Reply

    நல்ல பதிவு.

  10. ஜெஸிலா January 7, 2008 at 8:07 am - Reply

    //சத்தியமான வார்த்தைகள்.// சீனா ரொம்ப அனுபவப்பூர்வமா சொல்றா மாதிரி தெரியுதே 🙂

    நன்றி கார்த்திக்.

  11. ஜமாலன் January 7, 2008 at 8:57 am - Reply

    நண்பர் இசாக்கின் இப்படம் திரையிடுவதுபற்றி நண்பர் முத்துக்குமரன் சாட்டில் கூறியிருந்தார். பர்த்தவுடன் பதிவிட்ட உங்களுக்கு பாராட்டுக்கள். இசாக்கின் சமூகப் பொறுப்புணர்விற்கு பாராட்டுக்கள். உங்களுக்கு கிடைத்த மற்ற குறும்படங்களின் சுட்டிகளை தந்தால் எங்களைப் போன்றவர்களுக்கு பார்க்க வாய்ப்பாக இருக்கும்.

    தொடர்ந்து குறும்படங்கள் பற்றிய உங்கள் பதிவுகளை எதிர் நோக்குகிறேன்.

  12. ஜமாலன் January 7, 2008 at 8:57 am - Reply

    உங்களது பதிவு வடிவம் அழகாக உள்ளது. இது டெம்பிளேட்டா அல்லது நிங்களே வடிவமைத்ததா?

  13. ஜெஸிலா January 7, 2008 at 9:06 am - Reply

    ஜமாலன், கீழே சில சுட்டிகள். இது தவிர குறும்படம் என்று தமிழிலோ short film என்று ஆங்கிலத்திலோ தேடினால் இன்னும் நிறைய கிடைக்கும்.

    செருப்பு: http://www.yarl.com/audio_video/shortfilms/seruppu.asf
    http://www.youtube.com/watch?v=SPY9jg6CF2k

    மனுஷி: http://www.youtube.com/watch?v=J77Mlhw_D1A

    இளைஞா: http://www.youtube.com/watch?v=xVRLmUtaXAQ

    குப்பை: http://www.youtube.com/watch?v=QWKIw7KUpM8

    தனியொரு மனிதனுக்கு: http://arunhere.com/movies/TManidhanukku.mov

    என் வலையை வடிவமைத்தது – ரியாத் ராஜா

  14. ஜமாலன் January 7, 2008 at 12:19 pm - Reply

    நன்றி ஜெஸிலா?

  15. காட்டாறு January 8, 2008 at 7:17 am - Reply

    குறும்படம் பற்றி பெரும்பதிவு! 😉 அருமையான பதிவு ஜெஸிலா. யூ டியூப்ல பார்த்தேன். நன்றி உங்களுக்கே.

    இசாக்குக்கு எனது பாராட்டுகள்! கிராமங்களுக்கும் எடுத்துச் செல்ல எண்ணும் அவரின் ஆசை நிறைவேறும்.

  16. தமிழ்-முகம் January 8, 2008 at 7:24 am - Reply

    குரும்படம் பற்றிய தங்களின் ஆதங்கம் எல்லோருக்கும் உண்டு. தமிழ் நாட்டில், அதுவும் குக்கிராமங்களில் கூட அதன் தாக்கம் தற்போது நன்கு தெரிகிறது. நிழல் மற்றும் தமுஎச போன்ற அமைப்புகள் மும்முரமாக இதற்காக செயல்படுகின்றன. நிழல், 5 நாட்கள் பயிற்சி வகுப்புகளை கிராமங்கள் தோறும் நடத்தி வருகிறது. மேலும் கடைசி நாள் பயிற்சியாக ஒரு குரும்படமும் எடுப்பதற்கான வாய்ப்பும் தருகிறார்கள்.(சமிபத்தில் நான் கலந்து கொண்டேன்). மேலும் உலகின் மிக சிறந்த குரும்படங்கள், ஆவனப்படங்கள் (மொத்தம் 50 படங்களுக்கும் மேல்)திரை இடப்பட்டன. மிக அற்புதமான அனுபவம். நூறு பேர் கலந்து கொண்டோம். திருனெல்வேலியில் நூறு பேர் என்பது பேராச்சரியம். இன்னும் ஒரு சில வருடங்களில் சினிமா துறையிலும் இம் மாற்றத்தினை எதிர் பார்க்கலாம். நன்றி. தமிழ்-முகம். http://www.tamil-mugam.blogspot.com

  17. ஜெஸிலா January 8, 2008 at 8:49 am - Reply

    நன்றி காட்டாறு. //நன்றி உங்களுக்கே.
    // நன்றி எனக்கெல்லாம் இல்லீங்க. படம் எடுத்தவங்களுக்கு அதனை வலையேற்றியவங்களுக்கும் தான் :-))

    //இசாக்குக்கு எனது பாராட்டுகள்! கிராமங்களுக்கும் எடுத்துச் செல்ல எண்ணும் அவரின் ஆசை நிறைவேறும்.// நன்றி.

    //.(சமிபத்தில் நான் கலந்து கொண்டேன்). மேலும் உலகின் மிக சிறந்த குரும்படங்கள், ஆவனப்படங்கள் (மொத்தம் 50 படங்களுக்கும் மேல்)திரை இடப்பட்டன. மிக அற்புதமான அனுபவம்// நன்றி தமிழ் முகம். உங்க அனுபவங்களை பதிவிட்டு பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

  18. koothanalluran January 8, 2008 at 10:33 am - Reply

    சென்னையில் தம்பி இசாக்கை சந்த்தித்த போது குறும்பட வேலையில் மும்முரமாக இருப்பதாக சொன்னார். உரத்த சிந்தனையுடைய இசாக் எதற்காக கவிதையை விட்டு குறும்படத்திற்கு செல்கிறார் என எண்ணியதுண்டு. உங்கள் பதிவைப் பார்த்த பின்னர் என் கருத்தை மாற்றிக் கொண்டேன்.

    படம் பார்க்கும் வாய்ப்பு எப்போது கிட்டுமோ ?

  19. ஜெஸிலா January 8, 2008 at 1:47 pm - Reply

    //படம் பார்க்கும் வாய்ப்பு எப்போது கிட்டுமோ ?// இன்ஷா அல்லா நான் ஊருக்கு வரும் போது தருகிறேன்.

  20. தமிழ்-முகம் January 9, 2008 at 6:14 am - Reply

    தமிழ் திரை பட இயக்குனர்கள் உருப்படியான படைப்புகளை உருவாக்குவது இல்லை என கவலை பட்டிர்கள். ஆனால் நமது இயக்குனர்கள் எடுக்கும் எல்லா படங்களுமே மிக சிறந்த குரும்படங்கள் தான். 2.30 மணி நேர படத்தில் திணிக்கப்படும் பாட்டுக்களுக்கும், தேவையில்லாத சண்டை காட்சிகளுக்கும், கதை ஓட்டத்திற்கு சம்மதமில்லாத காமெடி, பன்ச் டயலாக், அது இது என குப்பைகளை களைந்துவிட்டு பார்த்தால் 20 நிமிடங்கள் ஓடக் கூடிய அருமையான குரும்படம் தயார். நன்றி. தமிழ்-முகம்

  21. Tamil Mugam January 10, 2008 at 6:33 pm - Reply

    குரும்படம் சார்ந்த ஒரு ஆச்சர்யமான செய்தி. தமிழில் முதல் ஆவணப் படம் வெளியான ஆண்டு 1940. ஏ.கே. செட்டியார் என்பவர் மஹாத்மா காந்தி அவர்களை பற்றிய புகைபடம் மற்றும் வீடியோ பதிவுகளை 1936 முதல் சேகரித்து 1940 ம் ஆண்டு ஆவனப்படமாக வெளியிட்டார். அச்சமயம் குரும்படம் மற்றும் ஆவணப்படங்கள் ப்ற்றி பரவலாக அறியபடாததன் காரணமாக இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.(ஒரு வேளை இந்தியாவின் முதல் ஆவனப்படமாக கூட இது இருக்கலாம். அறிந்தவர்கள் தெளிவுபடுத்தவும்).

    நன்றி….தமிழ்-முகம்

  22. கிருத்திகா January 10, 2008 at 6:34 pm - Reply

    ” ‘விஷுவல் கம்யூனிகேஷன்’, ‘மாஸ்மீடியா’ துறைகளில் படிக்கும் மாணவர்களுக்கு காண்பித்து அவர்கள் நடத்தும் கிராமப்புற பட்டறைகளிலும், நகர்புற சேவைகளிலும் போட்டுக் காண்பிப்பதோடு நிறுத்திவிடாமல் என்ன புரிந்தது என்று அவர்களுக்கிடையே கருத்து பரிமாற்றம் நடத்தி விழிப்புணர்வு கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.
    ” இதைப்பற்றிய மற்றுமொறு பதிவை படித்தபோது எனக்கும் இப்படித்தான் தோன்றியது. நல்ல அறிமுகம். வாழ்த்துக்கள்.

  23. கண்மணி January 10, 2008 at 6:34 pm - Reply

    ஜெஸி மொக்கை போடலாமா?
    அழைத்திருக்கிறேன்.தப்பிக்க முடியாது.ஹாஹா
    http://kouthami.blogspot.com/2008/01/blog-post_09.html

  24. ஜெஸிலா January 13, 2008 at 6:35 am - Reply

    //தமிழில் முதல் ஆவணப் படம் வெளியான ஆண்டு 1940. ஏ.கே. செட்டியார் என்பவர் மஹாத்மா காந்தி அவர்களை பற்றிய புகைபடம் மற்றும் வீடியோ பதிவுகளை 1936 முதல் சேகரித்து 1940 ம் ஆண்டு ஆவனப்படமாக வெளியிட்டார். // தகவலுக்கு நன்றி தமிழ் முகம். இந்த படம் வலையேற்றப்பட்டிருக்கிறதா?

  25. தருமி January 13, 2008 at 1:56 pm - Reply

    நீங்கள் சொன்ன குறும்படங்களின் தொடுப்புகள் பற்றிக் கேட்க நினைத்தேன்; கொடுத்து விட்டீர்கள்.

    அறிமுகங்களுக்கு நன்றி..

Leave A Comment Cancel reply