அழகான ‘கையெழுத்து’


They are providing us with the last meal
They would kill when the night is about to end
We shouldn’t be there to die with pain when the sun rises
My dear love let’s kill each other in this dark

அவசரமாக கடைசி உணவை பரிமாறினார்கள்
அந்த இரவு முடியும் முன் நம் உயிரை பறிக்க
வலியால் துடித்து சாக நாம் இருக்க கூடாது சூரியன் எழும்பும் முன்
என் பிரியமானவளே இந்த இருளிலேயே நாம் நம்மை முடித்து கொள்வோம்

ஆங்கிலத்தில் கீழே ஓடும் துணையெழுத்துக்களை பிடித்துக் கொண்டே படம் பார்த்து புரிந்துக் கொண்ட மலையாளப் படம் ‘கையொப்பு’ அதில் நான் புரிந்து கொண்ட கவிதையின் மொழிபெயர்ப்புதான் மேலே. இந்த படத்தில் மிக சில முக்கிய கதாபாத்திரங்களை வைத்து கதை நகர்வு. இதில் பாலசந்திரனாக மம்முட்டி, பத்மாவாக குஷ்பு, சிவதாஸனாக முகேஷ்.

பிடித்தமானவர்களைப் பற்றி பேசும் போது நம் உதடுகளுக்கு முன்பே அந்த உற்சாக மொழியை கண்கள் பேசிவிடும். இப்படி விருப்பத்தை விட்டுச் செல்லும் சுவடுகளை மிக நெருக்கமானவர்கள் கவனித்துவிடுவதால் மிகுந்த அடக்கமாக பேசுவது இயல்பென்றாலும் தெரியாதவர்களிடம் வெளிப்படுத்தும் வகையில் பேசிவிட்டால் யூகமே வாழ்க்கையை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும். அப்படித்தான் தனக்கு பிடித்தமான பாலனை குறித்து பத்மா பேசுகையில் அதுவும் பாலன் எழுதிய கவிதை பற்றி பேசுகையில் அவள் காட்டும் ஆர்வத்தை கவனித்த சிவதாஸன் அந்த செய்தியை பாலனிடம் கடத்தி அவரையே உயிர்ப்பிக்கிறார்.

பாலசந்திரன்- மனிதாபிமானி, தலைக்கனமில்லாத மெல்லிய உணர்வுள்ள கூறிய சிந்தனையுள்ள புத்திஜீவி மலையாள எழுத்தாளர். அவர் எழுதிய புத்தகத்தின் ஒரு பகுதியை வாசித்துவிட்டு அதில் காதல் கொண்ட கிளிப்பாட்டு பதிப்பகத்தின் உரிமையாளர் சிவதாஸன் அவரை எழுதி முடிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டாலும் வெற்று தாளைப் போல மனத்தடையில் இருந்து மீள விரும்பாதவராக ஆர்வம் காட்ட மறுக்கிறார் பாலசந்திரன். இந்த இயல்பு நம் பதிவுலகில் தினம் தென்படும் ஒன்றுதானே. எழுத நேரமின்மை, சோம்பல், நேரமிருந்தும் ஆர்வமிருந்தும் ‘எழுதியென்ன’ என்ற அலட்சியம் இப்படி ஒவ்வொருவருக்கும் எழுதாமைக்கு ஒவ்வொரு காரணங்கள். அதை போலவே தான் பாலனுக்கும். ஆனால் தொலைத்த காதலி கிடைத்த பிடிமான மகிழ்ச்சியில் முழு மூச்சாக முடிக்கிறார் குறிக்கோள் இல்லாமல் நிறுத்தி வைத்திருந்த நாவலை.

‘நட்பாக இருந்த உறவை தாண்டிவிட்டது எங்கள் உறவு, நீ தான் புரிந்துக் கொண்டு உதவ வேண்டும், விலக வேண்டும்’ என்று கணவன் ஸ்ரீ வெளிப்படையாக மனைவி பத்மாவிடம் சொல்லும் சம்பவம், கணவரையும்- அவர் தோழியையும் குறித்து பத்மா ‘made for each other’ என்று சொல்வதான காட்சிகள் ஹிந்திப் படத்தில் பார்த்ததுண்டு, மலையாளப் படத்தில் எனக்கு இதுதான் முதல் முறை. தென் இந்தியர்களென்றால் கலாசாரம், ஒழுக்கம், பண்பாடு என்று பேசிக் கொண்டு சமுதாயத்திற்காக மட்டுமே வாழ்ந்து கொண்டு, கணவர் தவறான பாதையில் செல்ல முழுக்க மனைவிதான் காரணம் போன்ற வகைறாக்களையே படமாக, கதையாக வடிப்பவர்களுக்கு மத்தியில் இப்படியான காட்சிகள் எனக்குப் புதியதுதான்.

முதிர்ந்த மனிதர்களின் கவிதையான விரசமில்லாத மெல்லிய காதலை அழகான திரைக்கதையில் சொல்லியிருக்கிறார் படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் ரஞ்சித். விலாசத்தைக் கொடு ‘மை லைஃபை’ அனுப்பி வைக்கிறேன் என்ற வசனம் பாலச்சந்தரை நினைவுப்படுத்தியது. இங்கு வசனம் அம்பிகாசுதன். பாடல் அதிகமில்லை என்பதற்காக இசையமைப்பாளர் வித்யாசாகருக்கு வேலையில்லை என்று சொல்லிவிட முடியாது ஏனெனில் பின்னணியில் வரும் ரம்யமான இசைதான் காட்சிகளுக்கான பலமெனலாம். ஒவ்வொரு நடிகர்களும் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். ரஞ்சித் கதாபாத்திரங்களை வடித்திருக்கிறார் என்று சொல்வதை விட செதுக்கியிருக்கிறார் என்றால் மிகையாகாது. மிகக் கவனமாக இந்த சுபாவமுள்ளவர் இப்படியான சூழலில் இவ்வாறே நடந்து கொள்வார் என்று அந்த கதாபாத்திரத்தின் நிலையில் நின்றே ஒவ்வொரு காட்சியையும் கதையையும் அமைத்திருக்கிறார் எனலாம். சொல்லாமலேயே விளங்கும் நடிப்பு திறன் கொண்ட மம்மூட்டியைப் பற்றி எழுத அவசியமேயில்லை, அவருக்கு இது 300வது படம். இப்படத்திற்காக குஷ்புவுக்கு கேரள அரசின் சிறந்த குணச்சித்திர நடிகைக்கான விருதும் கிடைத்தது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வந்த இந்தத் திரைப்படத்தை சமீபத்தில் பார்க்க நேரவே தாமதமாக படத்தைக் குறித்த என் பார்வை .

அமைதியான நல்ல மனநிலையோடு பார்க்க வேண்டிய நல்ல படம். அன்பே சிவம் என்று உணர்த்தும் மற்றொரு படம். இதே படத்தை குறும்படமாக எடுத்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமோவென்று தோன்றியது. சர்வதேச படவிழாவில் திரையிட்ட இரண்டு மலையாளப் படங்களில் ‘கையொப்பும்’ ஒன்று. இந்தப் படத்திற்கு மலையாளத்தில் நல்ல வரவேற்பு ஆனால் இதே படம் தமிழில் வந்தால் கண்டிப்பாக ஓடாது என்பது என் யூகம்.

By | 2009-07-13T09:40:00+00:00 July 13th, 2009|திரைவிமர்சனம்|20 Comments

20 Comments

  1. படத்தைவிட நீங்கள் அதைச் சொல்லி இருக்கும் பாங்கே அழகாக இருக்கிறது ஜெசிலா.

    இது போல யாரவது எடுத்துச் சொல்லவிட்டால் அழகான படைப்புகளை நாம் இழந்துவிடுகிறோம்.

    ஒரு நல்ல செய்தி கொடுத்தற்கு நன்றி

  2. ராமலக்ஷ்மி July 13, 2009 at 11:11 am - Reply

    மிக அழகான விமர்சனம், ஒரு கவிதையைப் போல.

    வல்லிம்மா சொல்லியிருப்பதை அப்படியே வழி மொழிகிறேன்.

  3. ராஜா | KVR July 13, 2009 at 11:11 am - Reply

    Welcome back. உங்க திரைப்பார்வை நல்லா இருக்கு, அப்பப்போ/அடிக்கடி எழுதுங்க…

  4. சுல்தான் July 13, 2009 at 11:56 am - Reply

    அண்ணாச்சி பதிவில் படததின் பெயர் இல்லாமல் இதே கவிதை வரிகளோடு விமர்சனம் எழுதி இருந்தார். இனியொரு முறை தியேட்டரில் வந்தால் பார்க்க வேண்டும்.

  5. கோபிநாத் July 13, 2009 at 1:27 pm - Reply

    ஆகா..காலையில அண்ணாச்சி இப்பப நீங்களுமா!!…ரைட்டு..;))

    பதிவு மேல பதிவு போட்டு துண்டிவிடுறிங்க…இதை எங்க பார்க்கா? online கிடைக்குமான்னு தெரியல.

    நல்ல விமர்சனம்…;)

  6. ஜெஸிலா July 13, 2009 at 1:44 pm - Reply

    வல்லிம்மா, படத்தைவிடன்னா அப்ப படத்தை பார்த்தாச்சா? அப்புறம் ரொம்ப நாளாச்சு நீங்க இந்த பக்கம் வந்துன்னு சொல்ல மாட்டேன் நான் இந்த பக்கம் வந்துன்னு சொல்ல வந்தேன் :-). ஆமா அடுத்த துபாய் பயணம் எப்போது. நேரில் சந்திக்க ஆவல்.

    ராமல‌ஷ்மி, மிக்க நன்றி வந்தமைக்கும் பின்னூட்டத்திற்கும்.

    ராஜா, நிலாவுக்கும் இந்த மாதம் பிறந்தநாளென்ற நினைவு வாழ்த்து தெரிவியுங்கள். அடிக்கடி எழுதணும்னுதான் நினைக்கிறேன், எங்க முடியுது.

    சுல்தான் ஐயா நலமா? இதே கவிதை வரிகளென்றால் – அவுக எழுதினதையே இங்கிட்டும் போட்டுட்டேன்னு சொல்றீங்களா? அவ்வ்வ்..:-) இது தியேட்டரில் எங்கு இங்கு வரும்? குறுந்தகடை தேடுங்கள்.

    கோபி, கவலையே வேணாம். கோட்டுல தேடி பார்த்ததுதான். கிடைக்கும் தாராளமாக.

  7. Benazir Fathima July 14, 2009 at 9:33 am - Reply

    tamil nadla nalla padam odinatha sarithirame illa……… oru velai indha padathula sasikumar team eduthu nadicha, oda chaces iruku……..coz avanga heroism ku mukiyathuvam kudukamatanga…….nalla vimarsanam mrs.jazeela………indha vimarsanam indha padathai paarka thoondutha………innika cd thaangalaen pls……..

  8. ஜெஸிலா July 14, 2009 at 9:46 am - Reply

    பெனு, கண்டிப்பா விஜய் ரசிகைக்கெல்லாம் இந்த படம் பிடிக்காது. அப்புறம் இந்த படத்தை பார்த்துட்டு என்ன திட்டிக்கிட்டு இருப்ப எனக்கு ஏதோ ஆகிடுச்சுன்னு எதுக்கு வம்பு படத்தை நீ பார்க்க வேணாம் தாயி. 🙂

  9. ராஜா | KVR July 14, 2009 at 1:23 pm - Reply

    //ராஜா, நிலாவுக்கும் இந்த மாதம் பிறந்தநாளென்ற நினைவு வாழ்த்து தெரிவியுங்கள். அடிக்கடி எழுதணும்னுதான் நினைக்கிறேன், எங்க முடியுது.//

    அடுத்த மாதம் ஜெஸிலா. இப்போ இந்தியாவிலே இருக்காங்க, நானும் பிறந்தநாளுக்கு ஊருக்குப் போறேன். வரும்போது மூவருமாக வருவோம்.

    அடிக்கடி முடியாதுன்னு தெரியும், அதனால் தான் அப்பப்போவையும் சேர்த்துக்கிட்டேன் 🙂

  10. shabi July 14, 2009 at 2:32 pm - Reply

    கடந்த ஒரு வருடத்திற்கு முன் நான் துபையில் இருக்கும் போது உங்களின் ஜில்லுன்னு ஒரு காதல் முன்பே வா பாடல் விமர்சனம் பாத்துதன் நான் பிளாக் படிக்கவே ஆரம்பிச்சேன் நீங்க ஏன் இப்ப நிறைய எழுதுவதில்லை நான் இப்ப அபுதாபியில் இருக்கிறேன்

  11. படம் சூப்பர்

  12. mayflower July 15, 2009 at 8:03 am - Reply

    Hello Jezila, long time no post! welcome back after ur holidays… I too want to see this film after reading ur post! will try to get cd! by the way my son is now back with me here 🙂

    peace upon u!

  13. சென்ஷி July 15, 2009 at 8:03 am - Reply

    🙂

    வெல்கம் பேக்!

  14. அய்யனார் July 15, 2009 at 8:03 am - Reply

    உங்கள காணாமல் போன பதிவர் லிஸ்ட் ல அப்ப சேக்க முடியாதா 🙂
    நேத்து நானும் இந்த படத்த பார்த்தேன்.நல்ல படம்.வாழ்க்கை மீதான நம்பிக்கைகளை நெகிழ்வா சொல்லிட்டே வந்து கடைசில யதார்த்த விட்டு முகத்தில அறைஞ்சிருக்காங்க.

    அடிக்கடி எழுதுங்க

  15. ஜெஸிலா July 15, 2009 at 2:16 pm - Reply

    சரி ராஜா, கண்டிப்பா அப்பப்பவாவது எழுத முயற்சிக்கிறேன். பயணம் இனிதே அமைய வாழ்த்துகள். நிலா குட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்தை மறக்காம சொல்லிடுங்க.

    ஷாபி, அதன் பிறகு நீங்க படிக்க வரதே இல்லையா அதனால நான் எழுதுறதே இல்ல. இப்ப மறுபடியும் படிக்க ஆரம்பிச்சுட்டீங்கள அதனால் எழுதிடுறேன் 🙂

    Mayflower, மிக்க நன்றி. மகன் மீண்டும் அருகிலிருப்பதில் மகிழ்ச்சி. இந்த வயதில்தான் நாம்முடைய அருகாமை அவர்களுக்கு தேவை. அழைத்துக் கொண்டதில் மகிழ்ச்சி.

    நன்றி ஸ்டார்ஜன்

    வாங்க சென்ஷி, நலம் தானே?

    ஹப்பா! காணாம போன பட்டியலிலிருந்து தப்பிச்சேன். ம்ம் அந்த கடைசி முடிவு எதிர்பார்க்காத ஒன்று. ராஜா சொன்ன மாதிரி அடிக்கடி முடியாவிட்டாலும் அப்பப்போ எழுத வேணும்.

  16. பாலு July 17, 2009 at 12:24 pm - Reply

    நல்லப்படங்களை பார்க்க வேண்டுமா என்ன? ஜெஸிலாவின் கிறுக்கல்கள் படித்தால் போச்சு.

  17. ஜெஸிலா July 17, 2009 at 1:48 pm - Reply

    நன்றி பாலு. ஆனால் படித்த பிறகு படம் பார்க்க தூண்ட வேண்டும் அதுதான் எழுத்துக்கு வெற்றின்னு நான் நினைக்கிறேன் – அப்ப நீங்க? 🙂

  18. பாலு July 29, 2009 at 6:36 am - Reply

    தாரே ஸமீன் பர் மற்றும் ஸ்லம் டாக் படங்கள் பார்த்து, சினிமாக்களை உங்கள் விமர்சின கருத்துக்களுடன் அனுபவித்தேன். இந்த மலையாளப்படத்தை எனது மலையாள நண்பர்களிடம் கேட்டு வாங்கி பார்க்க வேண்டும். முயற்சி செய்கிறேன்.

  19. ஜெஸிலா July 29, 2009 at 11:34 am - Reply

    எனக்கு பிடித்திருந்தது எழுதினேன். உங்களுக்கு பிடிக்குமான்னு தெரியவில்லை பாலு.

  20. PARANDIYAN August 5, 2009 at 5:53 am - Reply

    நல்ல விமர்சனம்,

    நான் பார்க்க மறந்துதான் போனேன்,

    உங்களின் விமர்சனம் பார்த்தபிறகு பார்க்க ஆவலாய் உள்ளது.

    தொடர்ந்து நல்ல பதிவுகளை எதிர்பார்க்கிறேன்….

    —பறண்டியான்…..

Leave A Comment