உயரே பறக்கும் காற்றாடி….

“இந்த உலகத்தில் பாவம் என்பது ஒன்றே ஒன்றுதான் அது ’திருட்டு’ மட்டும்தான். திருட்டே வெவ்வேறு உருப்பெரும் போது அதுவும் பாவமாகிறது. எப்படியென்றால், ஒருவரைக் கொலை செய்யும் போது ஒரு உயிரை, ஒருவரின் வாழ்வைத் திருடுகிறோம், அதுவே கணவனிடம் மனைவிக்கான உரிமையை திருடுவதாகிறது, அதுவே தந்தையிடம் குழந்தைக்குண்டான உரிமையை திருடுவதாகிறது. நீ ஒரு பொய் சொல்லும் போது நீ ஒருவருக்கு சேரவேண்டிய உண்மையைத் திருடுகிறாய். அதனால் திருட்டை விட வேறு பெரிய பாவம் இருந்துவிட முடியாது” என்று வாழ்வியல் விஷயங்களிலிருந்து விண்ணில் விடும் காத்தாடி வரை பற்றி பேசும் ஒரு நண்பராக, ஆசானாக, பாதுகாப்பாளனாக மகன் அமீரின் நலனுக்காகவே உயிர்வாழும் நல்ல தந்தைதான் ஆக்ஹா. இவர் ஆப்கானிஸ்தான் முல்லாக்களின் கையிலிருந்து வதைபட விரும்பாது சுதந்திர வாழ்வை தேடி, ரஷ்யாவை சபித்துக் கொண்டே பாகிஸ்தான் சென்று அங்கிருந்து அமெரிக்கா செல்ல சரக்குந்தில் பயணம். வழியில் வண்டியை சோதனைக்காக நிறுத்தும் காவலாளி வண்டியில் இருக்கும் பெண்ணை 5 நிமிடம் அவருடன் ஒதுங்க கேட்டதைப் பொறுக்க முடியாமல் கொதித்து போகும் ஆக்ஹா மறுத்துப் பேசி வாதாடுகிறார். யாரோ ஒருவருக்காக நெஞ்சை நிமிர்த்தி குண்டை ஏந்தத் தயாராக இருக்கும் தந்தைக்கு நேர் எதிர் ஆமிர். தன் உயிர் தோழன் ஹஸன் அடிவாங்குவதை ஒளிந்திருந்து வேடிக்கை பார்த்து உதவ முடியாத கோழை. ஆனால் ஆமிருக்கு ஏதேனும் ஒன்று என்றால் தன் உண்டி வில்லால் ஓங்கி விரட்டுவான் ஹஸன், ஆமிரின் வெற்றியைக் காண ‘காத்தாடி’யை இயக்க உதவுவான், வானத்தையே பார்க்காமல் ஆமிரின் கையசைவுகளை வைத்தே காத்தாடியின் திசையையறிந்து காத்தாடி பந்தயத்தில் வெற்றியடைய உதவுவான், பந்தயத்தில் வென்ற காத்தாடி வரும் திசையறிந்து எடுத்து வரக் காத்திருப்பான். ஹஸாரா இனத்தைச் சேர்ந்த ஹஸனைக் கண்டாலே வெறுப்பை கக்கும் பஷ்தூன் இனத்தை சேர்ந்த ஆசெப் மற்றும் அவனது நண்பர்கள் ஆமிரை ஹஸனைவிட்டு விலகியிருக்க எச்சரித்ததோடு ஹஸன் தனியாக மாட்டும் போது அவனிடம் தகாத முறையிலும் நடந்துக் கொள்கிறார்கள். நண்பனைக் காப்பாற்ற முடியாத கோழை ஆமிர் ஹஸனை தற்காத்துக் கொள்ள முடியாத கோழையென்று தூற்றி ஒதுக்குவதோடு தன் குற்றவுணர்ச்சியை மறைக்க நண்பன் ஹஸன் மீது களவுக் குற்றத்தை சுமத்திப் பிரிகிறார்கள் சிறுவர்களாக.

கம்யூனிசக் கொள்கைகளையும், இஸ்லாம் மதத்தைத் தவறாக புரிந்துக் கொள்ளும் முல்லாக்களையும் விமர்சிக்கும் ஆக்ஹா தன் மகன் தனக்காகவே போராட முடியாதவனாக இருக்கிறானே இவன் பிறருக்காக எப்படி தட்டிக்கேட்பான் என்று அவர் நண்பர் ரஹீம்கானிடம் வருத்தப்படும் போது ’குழந்தைகள் வண்ணம்தீட்டும் புத்தகமல்ல தேர்ந்த வண்ணத்தை தீட்ட அவர்கள் இயல்பிலேயே விட்டுவிட வேண்டும். அவன் உன்னை மாதிரி இல்லாவிட்டாலும் அவன் விருப்பப்படி நல்ல கதையாசிரியராவான்’ என்ற நம்பிக்கைகேற்ப காலிபோர்னியாவில் எழுத்தாளராகிவிடுகிறான் ஆமிர். சிறிய வயதில் அவன் எழுதிய கதைகளை விரும்பிக் கேட்பவர்கள் ரஹீம்கான் மற்றும் ஹஸன் மட்டும்தான். ஆமிர் எழுதிய கதையை பாராட்டி ரஹீம்கான் அனுப்பும் கடிதத்தை மகிழ்ந்து படிக்க, ஹஸன் அந்தக் கதையின் விபரத்தை வினவுவான். ”ஒரு மாயக் கோப்பையில் கண்ணீர் சிந்தினால், கண்ணீர் முத்தாகிவிடும் கதையின் முடிவில் ஒரு முத்து மலைக்குவியலின் கீழ் கதைநாயகன் மனைவியைக் கொன்ற இரத்தக் கறையுடன்” என்று சொல்லும் போது ஹஸன் அப்பாவியாக ”கண்ணீர் வர ஏன் மனைவியைக் கொல்ல வேண்டும் ஒரு வெங்காயத்தை அவன் வெட்டினால் என்ன?” என்று கேட்கும் காட்சி நமக்கு புன்சிரிப்பை வரவழைக்காமல் இல்லை.


காலித் ஹுசைனியின் முதல் புதினமான ’தி கைட் ரன்னரை’த் தழுவி 2007 இல் அதே பெயரில் வெளிவந்த படம். கதையென்று பார்த்தால் இரு நண்பர்களான ஆமிர்- ஹசன் சிறு வயதில் பிரிந்து பின்பு ஹஸன் தன் தந்தைக்கும் ஹஸாரா இனத்தை சேர்ந்த வேலைக்காரிக்கும் பிறந்தவன் என்பதை அறிந்ததும் அவனை ஏற்க மனம் விரும்புகிறது. அதுவும் தன் வீட்டைக் காக்க தன் உயிரையும் தாலிபானரிடம் இழக்கிறான் என்று அறிந்து வேதனையடையும் ஆமிர் தன் கோழைத்தனத்தைத் துறந்து அவனுக்குக் கைம்மாறு செய்யும் வகையில் ஹஸனின் மகன் சோராபை தாலிபானிடமிருந்து மீட்பதே கதை.

ஆப்கானிஸ்தானின் முடியரசின் வீழ்ச்சி, ரஷ்யப்படை ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பு, ஆக்ஹா ரஷ்யாவை வெறுக்கும் காரணம், பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்குமான மக்கள் வெளியேற்றம், தாலிபானின் அட்டூழியம் என்று சில விஷயங்களை இன்னும் விவரமாகவும் விரிவாகவும் விளக்கியது படத்தை என்னுடன் சேர்ந்து பார்த்த ஆசிப் மீரான். உலக சினிமாக்களை உலகம் தெரிந்தவர்களுடன் உட்கார்ந்து பார்ப்பதின் சிறப்பு இதுதான்.

ஆமிர் காபுல் செல்லும் போது மத ரீதியில் அங்கு நடக்கும் கொடுமைகளும் அட்டூழியங்களும் பார்க்கும் போது இப்படியும் மனிதர்கள் உலகில் இருக்கிறார்களா என்ற பிரம்மிப்போடு மன அழுத்தத்தையும் தருகிறது. குறிப்பாக ஒரு கட்டத்தில் ஒரு பெண்ணை அவள் கற்பில்லாதவள் என்று குற்றம் சாட்டி, குற்றம் புரிந்த ஆண்- பெண் இருவரையும் முகத்தை மூடி ஒரு பொதுமக்கள் கூடியிருக்கும் அரங்கிற்குக் கொண்டு வந்து. இஸ்லாம் மத ஞானமேயில்லாத ஞானசூனியங்கள் மதகுருவாக ‘இறைவனுக்கெதிராகக் குற்றம் புரிந்த இந்தப் பெண்ணை கல்லால அடித்துக் கொல்வோம்’ என்று ஆணையிட எல்லோரும் தவறு செய்த இருபாலரில் அந்த பெண்ணை மட்டும் கல்லால் அடித்துக் கொல்லும் கொடூரத்தை சகிக்க முடியவில்லை. இத்தனைக்கும் அந்த மதகுரு அநாதை விடுதியில் இருக்கும் பெண் குழந்தைகளை இரகசியமாக கூட்டிச் செல்பவன். இது போன்ற உண்மைச் சம்பவங்கள் உலகில் நடக்கத்தான் செய்கிறது. மனித உரிமைக் குரல்கள் அங்கு ஒலிக்க விடுவதில்லை. மதமென்று மதம் பிடித்துத் திரிபவர்கள் சுத்த ‘சூஃபி’களாக நடித்துக் கொண்டு பெண்களைப் பொது இடங்களில் வைத்து அவமானப்படுத்துவதே மதத்திற்குப் புறம்பானது என்று உணராதவர்கள்.

தந்தையும் மகனும் கனமான மனதுடன் புலம்பெயர்கையில் மகன் நினைவுக் கொள்ளும் ரூமியின் கவிதை (நம்ம நாகூர் ரூமியல்ல இவர் பாரசீக கவிஞர்), ஒவ்வொரு வார்த்தைகளும் நெஞ்சை அள்ளியது. மொழியாக்கத்தில் தவறிழைப்பேன் என்பதால் அப்படியே:

If we come to sleep We are His drowsy ones.
And if we come to wake We are in His hands.
If we come to weeping, We are His cloud full of raindrops.
And if we come to laughing, We are His lightning in that moment.
If we come to anger and battle, It is the reflection of His wrath.
And if we come to peace and pardon, It is the reflection of His love.
Who are we in this complicated world?

ஆப்கானிஸ்தானின் விருப்ப விளையாட்டாம் பட்டம் விடும் விளையாட்டு. அந்த விருப்பத்தை அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளார்கள் அதுவும் ஒவ்வொரு குழந்தையும் பட்டம்விடும் போது காட்டும் உற்சாகமும் அவர்களின் முகபாவங்களும் ஆர்வமும் நமக்கும் பட்டம் விடும் ஆசையை தூண்டுகிறது. சின்ன வயதில் என் தம்பியுடன் விட்ட முதல் பட்டம், மாஞ்சா செய்கிறேன் பேர்வழியென்று என் தம்பி நாய் கழிவை தேடிப் போய் அடி வாங்கிய சம்பவம், ’நெத்தியடி’ படத்தில் பட்டத்திற்காக முதல் காட்சியில் ஓடுவது, ‘கேளடி கண்மணி’ படத்தில் மின்கம்பியில் சிக்கிய பட்டத்தை விடுவித்து ஜனகராஜ் இறக்கும் காட்சி, என்று என்னையுமறியாமல் பட்டம் தொடர்பான சம்பவங்கள் வந்துகொண்டே இருந்தது.

பார்க்கும் எல்லாருக்கும் இந்தப் படம் பிடித்துப் போகுமென்று சொல்ல முடியாது. ‘இந்தப் படத்தில் என்ன சொல்ல வராங்க’ என்று கேட்பவர்களெல்லாம் தயவு செய்து இந்தப் படத்தை பார்த்துவிட்டு என்னை திட்டிக் கொண்டு இருக்க வேண்டாம். படத்தில் காட்சி அமைப்புகள் அருமை, படத்தைப் பார்த்த பிறகு பஷ்தூன் யார், ஹஸாரா இனத்தவர்களின் சரித்திர வேர் என்று வேண்டியவைகளை ‘விக்கி’யை கேட்டுத் தெரிந்துக் கொண்டேன்.

மகன் சோராப் சுதந்திர ஆப்கானிஸ்தானில் வளர வேண்டும். ஓடித் திரிந்த தெருக்களைக் காண ஆமிர் வர வேண்டும். வண்ணப் பூக்கள் ஆப்கானிஸ்தான் சாலையெங்கும் பூக்கவேண்டும். மீண்டும் வானில் பட்டங்கள் உயர வேண்டுமென்பதே ஹஸனின் கனவு என்று ஆமிருக்கு எழுதுவார். ஹஸனுக்கு மட்டுமல்ல ஆப்கானிஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்த பலருக்கும் இந்தக் கனவிருக்கும். படத்தின் முடிவில் வானத்தை நோக்கிப் பறக்கும் பட்டத்தைப் போல் சிறுவன் சோராப் மன இறுக்கத்திலிருந்து வெளிவருகிறான் என்று என்னால் நிம்மதி பெருமூச்சை விட முடியவில்லை. ஆப்கானிஸ்தான் என்ற சாப பூமியிலிருந்து ஒரு சோராப் காப்பாற்றப்பட்டுவிட்டான் ஆனால் மற்றவர்கள் என்ற வருத்தம் தொக்கி நிற்கிறது.

By | 2009-08-03T06:15:00+00:00 August 3rd, 2009|திரைவிமர்சனம்|17 Comments

17 Comments

  1. சுல்தான் August 3, 2009 at 7:25 am - Reply

    படம் பார்க்க ஆவல் தூண்டுகிறது.
    CDயை இந்தப்பக்கம் கொஞ்சம்………

  2. ஜெஸி. இன்னும் இந்த படம் பார்க்கவில்லை.

    பகிர்விற்கு நன்றி..

  3. ஜெஸிலா August 3, 2009 at 8:50 am - Reply

    சுல்தான் ஐயா, குறுந்தகடெல்லாம் என்னிடம் இல்லை. ஆசிப் தன் வன் தகடில் இந்த படத்தை கொண்டு வந்தார் கணினிலேயே வைத்து பார்த்து முடித்துவிட்டோம்.

    நன்றி சூர்யா. நீங்க எப்படி இந்த படத்தை பார்க்காமல் விட்டீர்கள்? ஆச்சர்யமா இருக்கே 🙂

  4. கோபிநாத் August 3, 2009 at 9:04 am - Reply

    நோட் செய்துக்கிட்டேன்…இறக்கிடுவோம் ;))

  5. ஜெஸிலா August 3, 2009 at 10:03 am - Reply

    கோபி இறக்குறீங்க சரி, படத்தை பார்க்கிறீங்களா இல்லையா?

  6. ☀நான் ஆதவன்☀ August 3, 2009 at 12:36 pm - Reply

    ரைட்டு பார்த்திடுவோம். உங்க விமர்சனமே அழகா இருக்கு!

  7. jafar August 4, 2009 at 10:56 am - Reply

    It is surprising to note that is this the same person who wrote criticism for the film "Vaaranam Aayiram" which did not have any of the cinematic essence to talk about. Have you ever watched "A Wednesday" starring Naseeruddin Shah currently being remade by the Tamil Nadu's only commercial intellecutal Kamal Hasan?

  8. " உழவன் " " Uzhavan " August 4, 2009 at 10:56 am - Reply

    நல்ல எழுத்து.

  9. ஜெஸிலா August 4, 2009 at 1:00 pm - Reply

    ஆதவன், பதிவை படிச்சிட்டு எழுதினீங்களா இல்லா சும்மாவா? குழப்புறீங்களே!

    எனக்கும் ஆச்சர்யம் ஜாபர் உங்களுக்கு ‘வாரணம் ஆயிரம்’ பிடிக்காமல் போனது. எ வெட்னெஸ்டே பார்க்கவில்லை. பார்த்துட்டு சொல்றேன்.

    நன்றி உழவன்.

  10. ☀நான் ஆதவன்☀ August 4, 2009 at 1:49 pm - Reply

    அட படிச்சுட்டு தாங்க கமெண்ட் போட்டேன் 🙂

  11. கலையரசன் August 5, 2009 at 5:52 am - Reply

    பார்த்துவிட்டேன்.. உங்கள் விமர்சனமும் அருமை!!

  12. ஜெஸிலா August 5, 2009 at 2:31 pm - Reply

    நம்பிட்டேன் ஆதவன். 🙂

    நன்றி கலையரசன்.

  13. கீழை ராஸா August 7, 2009 at 5:56 pm - Reply

    விமர்சனம் படிக்கும் நேரத்தில் படத்தை பார்த்து விடலாம் போல் இருக்கிறது…?

    சிடி சப்பளை யார்…?

    அப்புறம் உங்க Profile-ல் உள்ள

    //அரிசு களைந்து கல் எடுப்பது போல்//
    இது அரிசி தானே..? இல்லை அரிசு தானா..?

  14. ஜெகநாதன் August 9, 2009 at 6:10 am - Reply

    அன்பு​ஜெஸிலா, ​நேர்த்தியான பட விமர்சனம். வாழ்த்துகள்! இனி எழுதப்போகும் பட விமர்சனங்களில் படத்தின் ஒளிப்பதிவு, இசை, திரைக்கதை​நேர்த்தி ​போன்றவற்றையும் குறிப்பிட்டால் உன்னதமான விமர்சனமாக அமையும்!

  15. R.Gopi August 11, 2009 at 1:25 pm - Reply

    ஹலோ ஜெஸிலா…

    இப்போதான் முதன்முதலாக இங்கு வருகிறேன்…. (கலையரசனின் வலையின் வழியே..)….

    "கைட் ரன்னர்" விமர்சனம் படிக்கறதுக்குள்ள படம் பாத்துடலாம் போல இருக்கு… அவ்ளோ விரிவாக எழுதி இருக்கீங்க…..

    கண்டிப்பாக பார்க்கிறேன்….

    சமீபத்தில் தான் "தி கிங்டம்" பார்த்தேன்…. அருமையாக இருந்தது…. நீங்களும் பாருங்கள்… பிடிக்கும்…..

    நேரம் கிடைக்கும் போது என் வலைகளையும் வந்து பாருங்கள்….

    மத்திய கிழக்கு நாடுகள் பற்றி ஒரு தொடர் இங்கு உள்ளது (www.edakumadaku.blogspot.com)

    ரஜினியை பற்றிய ஒரு தொடர் இங்கு உள்ளது (www.jokkiri.blogspot.com)

  16. ஜெஸிலா August 11, 2009 at 1:33 pm - Reply

    கீழை ராசா, இவ்வளவு சின்ன பதிவையே படிக்க முடியலை நீங்க எப்படி ஒரு படத்தை பொறுமையா பார்ப்பீங்கன்னு தெரியலை 🙂

    உண்மைதான் ஜெகநாதன் அதெல்லாம் குறிப்பிட்டிருக்க வேண்டும்தான். என் மற்ற விமர்சனங்களில் குறிப்பிட்டிருக்கிறேன் இதில் கதை சொல்லி பதிவு நீண்டுவிட்டதால் தவிர்த்துவிட்டேன்.

    வாங்க கோபி. வருகைக்கு நன்றி. ‘தி கிங்டம்’ இன்னும் பார்க்கவில்லை பார்த்துவிட்டு சொல்றேன்.

  17. உங்கள் விமர்சனமும் அருமை…படம் பார்த்தேன்..டுபாயில் நடக்கும் திரைப்பட விழாக்களுக்கு போவது உண்டா தோழி…?

Leave A Comment