Kavithai 2017-03-25T16:44:52+00:00

சுதந்திரப் பறவை

என்ன பார்க்கிறாய்
என்னை பார்க்கும் போது
என்னில் என்ன பார்க்கிறாய்?

நான் சுதந்திர பறவையா?
கட்டுக்கோப்புகுள் அடங்கியவளா?
இயந்திர உலகில் மாட்டியவளா?

கண்ணால் ஊடுருவி முகம் சுளிக்கிறாய்
கண்ணடியாக என் மேனி தெரியாததாலோ?
கறுப்பு முடிகள் மறைந்திருப்பதாலோ?

நாகரீகம் அறியாதவளாக
பிணைக்கப்பட்ட கைதியாக
நான் தெரிகிறேனோ உனக்கு?

எனகென்று சொந்த குரல்
எனகென்று சுயசிந்தனை இல்லை என்கின்றாய்
வேண்டாவெறுப்பாக மூடிக்கொள்கிறேன் என்கிறாய்

மூடி மறைப்பது – கூண்டு கிளியா?
முடியை மறைப்பது – அநாகரீகமா?
காட்ட மறுப்பது – திணிப்பா?

சிறு வட்டத்தில் அடைப்பட்டவளாக
பரிதாபத்தோடும், எரிச்சலோடும் பார்க்கின்றாய்
‘சுதந்திரத்தின்’ பொருள் அறியாமலேயே

கவலை, துயரம்
கோபமும், வேதனனயும் எனக்கு
கண்களின் ஓரம் கண்ணீரும் இருக்கு

கண்ணீரின் காரணம்
நீ என்னை ஒதுக்குவதாலும்
உன் கேலிக் கூத்தாலும் அல்ல

நீ உனையே ஒதுக்குவதால்
உனை நீயே ஏமாற்றிக் கொள்வதால்
இறுதி நாளில் பாவியாக நிற்கப் போவதால்

கண்களுக்கு நான் அழகாக
காட்சிப் பொருளாக
வடிவமான சிலையாக இல்லாமலிருக்கலாம்

எனக்கு தந்த சட்டத்தை மதிக்க விரும்புகிறேன்
அக அழகே முக அழகு என்னில் சொல்கிறேன்
ஆதிக்கம் இல்லாமல் என்னையே ஆள்கிறேன்

பின்னால் பார்க்க அண்டாங்காக்கா
அடையாளம் கண்டால்
நான் அறிவின் ஊற்று

அமைதியில் என் அழகும்
பொறுமையில் என் மென்மையும்
ஒழுக்கத்தில் என் பெண்மையும் காணலாம்

மன வலிமை
சரியான முடிவெடுக்கும் திறன்
சிந்திப்பதை செயல்படுத்தும் பக்குவம் உண்டு

வாழ வழியில்லாமல் வறுமை விரட்டும் போதும்
உழைப்புக்கு ஊதியம் மறுக்கும் போதும்
குட்டை பாவடையும் கட்டி இறுக்கும் மேலாடையும்
கைகொடுக்கும் என்றாலும் வேண்டாம் என்பேன்

கிடைப்பது எனக்கு மதிப்பும், மரியாதையும்
கீழ்த்தர பார்வை என் மீது பட்டதில்லை
அந்நிய கைகள் எனைத் தொட நினைத்ததில்லை
கண்களால் கற்பழிப்பவன் என் கண்ணில் பட்டதில்லை

உண்மையில் நானே சுதந்திரப் பறவை
விண்ணில் பறக்கும் என் சிறகே ‘ஹிஜாப்’
அபயத்தை அளிக்கும் கவசமே ‘அபாயா’
அணிந்துக் கொண்டு பறப்போம் சுதந்திரமாக!!

By | April 8th, 2006|Categories: கவிதை|9 Comments

விபத்து

முருங்க இலை பறிக்க மரமேறி
முழங்கால் சிராய்த்தும் அழாமல்
ஒட்டிய மண்ணைத் தட்டி விட்டவனை
பதறியடித்து தடவிக் கொடுத்த
பல்லில்லா பாட்டி நினைவில் நிற்கவில்லை

கோலி உருட்டி விளையாடி
எறும்பினால் கடிப்பட்டதால் அதை மிதிக்க
பாவம் என்று பரிதாபப்பட்டு
விஷக்கடியாய் பாவித்து வலிபோக்கிய
வழிப்போக்கன் மனதில் நிலைக்கவில்லை

காய்ச்சலில் சுருண்டதும்
கோவில் வேண்டுதல்களும்
பக்கத்து வீட்டு ·பாத்திமா அக்கா
·பாத்திஹ ஓதி தந்த தண்ணீரும்
பெரிய விஷயமாகப்பட வில்லை

பழுத்த முகத்தோடு
பார்ப்பார் முகம் சுளிக்கும் அம்மையேறி
முகம் தெரியாத நபர்களெல்லாம்
விசாரித்து பக்குவம் சொல்லியது
எப்போதும் என் நெஞ்சை தொட்டதில்லை

பெருநகர நெரிசலில்
இருசக்கர வண்டி ஓட்டிச் சென்றவனை
பல்லவன் தட்டிச் செல்ல
ஓரமாகக் குருதி வலிய உயிர் ஊசலாடக் கிடப்பவனைக்
கேட்பாரில்லை

உச்சுக்கொட்டி விட்டு
ஒதுங்கி நின்று பார்க்கக்கூட
நேரமில்லாமல் விரைந்து செல்லும் நகர மனிதர்களுக்கு
மனித நேயம் மரத்து போய்விட்டதா
மறந்து போய்விட்டதா?

By | April 2nd, 2006|Categories: கவிதை|0 Comments

யார் காரணம்!?

கனவோடு மனமேடையேறி
இன்பமாய் இல்லறம் தொடங்கி
விரைவிலே உற்றவன் இறக்க
நாட்பது கழிந்து வேலை தேடி
சேரவும் செய்தேன்
நானா காரணம்?

இருள் சூழ்ந்த வாழ்க்கையில்
விளக்காய் கிடைத்த வேலையை
தெய்வமாக போற்றி
கண்டவர் பார்வையை கடந்து
சீண்டுவான் கிண்டல் தாங்கினேன்.
துணிவா காரணம்?

ஒரு வாரத்திலே தெரிந்தது
புதிய துணை உண்டானது என்று
இழந்த துயரை மறந்து
கவசமான உயிரை
கவனமாய் பாவித்தேன்.
நம்பிக்கையா காரணம்?

எதிர்ப்புகளே மிகுந்தது
உணர்வுக்கு புரிதல் இல்லை
அழிக்க வற்புறுத்தல்
தாங்ககூடிய சுமை என்றேன்
கேட்பாரில்லை.

காரணம் தந்தார்கள்
சமுதாய சந்தேகம் என்று!

By | March 28th, 2006|Categories: கவிதை|0 Comments

தமிழ் இனி…

ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஆனபின்னும
அம்மா என்பதை பசுக்கள் மறவாது!
காற்று நுழையாத குகையிலும்
குடைந்து செல்லும் ஆற்றல் மிக்கவள் நீ!

புயலுக்கு மடிந்து சரியும்
வாழைத்தரு அல்ல
நூற்றாண்டுகள் பல கடந்து நிற்கும்
ஆலமரம் நீ!

வெள்ளையர்கள் வந்தாலும்
மொகலாயர்கள் மேய்ந்தாலும்
ஆரியர்கள் ஆண்டாலும்
செழித்த சாம்ராஜியம் பெற்றவள் நீ!

சிப்பியாக எளிதாகக் கிடைத்தாலும்
உன்னை ஆழ்கடல் நடுவே எடுத்த
முத்தாகவே கோர்த்து வைப்பேன்.
பொக்கிஷப்படுத்த வேண்டியவள் அல்லவோ நீ!

சிலப்பதிகாரத்தால் சிலிர்க்க வைத்தாய்
திருக்குறளைச் சுவைக்க வைத்தாய்
ஐந்திணையை வியக்க வைத்தாய்
உன் புகழை அளந்தால்
அந்த இமயம் கூட குட்டையே!

உன்னைக் கொண்டு
வெள்ளை நிலவை தங்கமாக்கலாம்
வெள்ளரியையும் விரலாக்கலாம்
கருங்குரங்கையும் அழகுப்படுத்தலாம்!

இயலாக இயங்கிக் கொண்டிருப்பவளே
இசையாக ஸ்வரத்தில் மட்டுமின்றி
நாவிற்கும் சுவை சேர்ப்பவளே
நாடகமாக மேடையில் அரங்கேறி
வெள்ளித்திரையில் வெளிச்சம் பெற்றவளே!

எவ்வினம் அழிந்தாலும்
வல், மெல், இடை என
மூன்றினத்தோடு கூடி நிற்பவளே!
உயிரில்லா சொற்களுக்கும்
உயிர்மெய் தந்தவளே!

செல்லரித்துப் போகும் புத்தகமா நீ?
பத்திரமில்லாத சொத்தல்லவோ!
வெடித்துப் பறந்து போகும் பஞ்சா நீ?
பாறையாகிய மனதையும் கரைக்கும்
வல்லமை பெற்றவள் அல்லவோ நீ!

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை
என ஐந்து நிலங்களிலும் தங்கியவளே
வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு
என நான்கு திசைகளிலும் திரிந்தவளே
த-மி-ழ் என்ற மூன்று எழுத்துக்களில் விரிந்தவளே
உன்னை பார்க்க, கேட்க, இரண்டு கண்கள் இரண்டு காதுகள் போதாதே

நீ எங்கள் கண்கள்
இனி வரும் நாட்களில் நாங்கள்
குருடர்களாக இருக்க விரும்பவில்லை

பூமி பிளந்து தேடினாலும
‘ழ’கர எழுத்துக் கிடைக்கப் பெறுமோ?

எந்நாட்டில் மழை விழுந்தாலும
உன் மீது விழாது தப்பிடுமோ?

தமிழ் அழியும்
ஆம், பிறந்த குழந்தை
தாய்ப்பால் சுவைக்க மறந்தால்

தமிழ் அழியும்
ஆம், காற்றினை ‘பொடா’ சட்டத்தில்
கைது செய்ய முடிந்தால்

பறவைகள் தூதாக
உன்னைச் சுமந்த காலம் போக
இக்கால கணினிக்குள்ளும் ஊடுருவி
இனி பிறக்கபோகும்
இயந்திர மனிதனையும் சென்றடைவாய்!

தமிழ் இனி – இது கேள்விக்குறி
தமிழ் இனிமை – இது முற்றுபுள்ளி

புரியாதவனுக்கு தமிழ் இனி??
புரிந்தவனுக்கு “இனியும் தமிழ்”…

தமிழ் இனி
என்பது முடியாத வாக்கியம்
முடித்தேன் அதனை
தமிழ் இனிது வளரும் எனக் கூறி.

(கவிஞர் அறிவுமதியின் தலைமையில் நடந்த கவியரங்கில் வாசித்த கவிதை)

By | May 10th, 2005|Categories: கவிதை|10 Comments