பல்லாயிரம் நபிகள் இந்த உலகில் தோன்றியிருந்தாலும், திருக்குர்ஆனில் குறிப்பிட்ட சில நபிமார்களைப் பற்றி மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படிப் பார்க்கையில் ஆதி மனிதர் ஆதம் (அலை) அவர்களுக்கு அடுத்து தோன்றிய நபி இத்ரீஸ் (அலை). ஆதம் (அலை) அவர்கள் மரணிக்கும் போது இத்ரீஸ் (அலை) அவர்களுக்குக் கிட்டத்தட்ட நூறு வயதாம்.
இத்ரீஸ் (அலை) அவர்களின் இயற்பெயர் எக்னூஹ் என்றும் சொல்லப்படுகிறது. ஆதம் (அலை) காலத்தில் இலைகளைக் கொண்டு தம்மை மறைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இத்ரீஸ் தையலை தொழிலாகவே செய்திருந்தவர். அவர் ஆடைகளைத் தைத்து உடுத்திக் கொள்ளும் முறையையும் மக்களுக்குக் கற்பித்துள்ளார். அவருடைய மூதாதையரின் வழிமுறைகளைக் கற்று, ஓர் இறைக் கொள்கையை மக்களுக்குக் கற்றுக் கொடுத்து நல்வழிப்படுத்தி அல்லாஹ்வை தொழவும், நோன்பு நோற்கவும், ஜகாத் கொடுக்கவும் வலியுறுத்தினாராம்.
இறைவன் நபி இத்ரீஸுக்கு முப்பது ஏடுகளை வழங்கியிருந்தானாம். அந்த இறைவணக்கத்தை அவர் இரவும் பகலும் அதிகப்படியாக ஓதிக் கொண்டிருப்பதை வானவர்களும் கண்டு வியப்பார்களாம். மிகவும் நேர்மையான இத்ரீஸ் (அலை), நபியான பிறகு பலமுறை வானுலகம் சென்று மறைவானவற்றையும் அறிந்து வந்து வானியலாளராகப் புவிக்கு அப்பாற்பட்ட உலகத்தை ஆராய்ந்து விண்ணில் உள்ள கோள்கள், நிலாக்கள், விண்மீன்கள் போன்ற வானியல்சார் பொருட்களின் உண்மைகளை ஆராய்ந்து கற்பிப்பாராம். அதுமட்டுமின்றி அவர்கள்தான் முதன்முதலில் எழுதுகோலைப் பயன்படுத்தி, அதனை வைத்து எழுதவும் மக்களைப் பயிறுவித்தார்களாம். எல்லாவற்றையும் மக்களுக்குக் கற்றுக் கொடுத்த காரணத்தாலேயே ‘பாடம் கற்றுக் கொடுப்பவர்’ என்று அரபியில் பொருள்படும் ‘இத்ரீஸ்’ என்பது அவர்களது பெயரானதாம்.
ஒரு வானுலகப் பயணத்தின் போது வானவரின் இறக்கையில் நான்காவது வானத்தை அடைந்ததும், அந்த வானவர் மலக்குல் மவ்த்திடம் (உடலிலிருந்து உயிரை எடுக்கும் வானவரிடம்) வந்து, “இத்ரீஸ் (அலை) அவர்களின் மரணத்தைத் தள்ளிப் போட முடியுமா? அவர் அல்லாஹ்வை அதிகம் வணங்க விரும்புகிறார்கள்” என்று கேட்டபோது, அதற்கு மலக்குல் மவ்த் “இப்போது அவர் எங்கே இருக்கிறார்?” என்று கேட்க, “என் இறக்கையில்தான்” என்று அந்த வானவர் பதில் தர, அதற்கு மலக்குல் மவ்த் “இப்போது தான் இறைவன் நபி இத்ரீஸின் உயிரை நான்காம் வானத்தில் கைப்பற்றச் சொன்னான். நானோ எப்படிப் புவியிலிருக்கும் இத்ரீஸின் உயிரை நான்காம் வானத்தில் கைப்பற்றுவது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்” என்று சிரித்துக் கொண்டே நபி இத்ரீஸின் உயிரை கைப்பற்றியதாகச் சொல்லப்படுகிறது.
இதைத்தான் “நாம் அவரை ஓர் உயரிய இடத்தில் உயர்த்தினோம் என்று திருக்குர்ஆனில் 19:57 குறிப்பிடுவதோடு நபி இத்ரீஸை (அலை) சத்தியவாதியாக இருந்துள்ளார் என்றும் அல்லாஹ் குர்ஆன் 19:56-இல் கூறியுள்ளான். இதையே நபிகள் நாயகம் மிஃராஜ் பயணத்தின் போதும் நான்காவது வானத்தில் இத்ரீஸ் (அலை) அவர்களைப் பார்த்தாகவும் ஹதீஸ்களும் உறுயளித்துள்ளன.
இத்ரீஸ் (அலை) அவர்களின் பேரனின் மகன்தான் நூஹ் (அலை) என்றும் வரலாற்று குறிப்புகள் சொல்கின்றன.
இவைகள் மட்டும்தான் நபி இத்ரீஸ் (அலை) அவர்களைப் பற்றிக் கிடைத்த குறிப்புகள்.
Leave A Comment