எல்லாம் யாருக்காக?


என் வயதொத்த
பிள்ளைகள்
கனவின் நடுவிலிருக்க
நான் நித்திரை விட்டு
குளிர் நடுக்கத்தில்
முக்காடில் நுழைந்து
மதரஸா விரைந்தேன்
புரியாத அரபி கற்க
அம்மம்மா மெச்சுதலுக்காக.

அழைப்பு விடுத்தவுடன்
கண்ணாமூச்சியில்
கண்கட்டவும் மறந்து
புரியாமல் மனனம் செய்த
பாடங்களை ஒப்பித்தபடி
தொழுதேன்
அன்புடன் அணைத்துக் கொள்ளும்
அப்பாவுக்காக

விதவிதமான ஆடையில்
தோழிகள்
பள்ளி விழாவிற்கு
பவனி வர
வெதும்பிய மனதை
ஹிஜாபில் ஒளித்தேன்
பெருமையுடன் முகர்ந்து முத்தமிடும்
அம்மாவுக்காக

விவரம் தெரியாத வயது ஓய்ந்து
பொருள் புரியாத மொழி
புலப்பட்டதும்
அறிந்து கொண்டேன்
ஓதலும், தொழுகையும், ஹிஜாபும்
நிலையில்லா உறவுக்காக அல்ல
ஒழுக்கத்தை விரும்பும்
இறைவா எல்லாம்
உனக்காகவென்று.

By | 2009-08-24T07:20:00+00:00 August 24th, 2009|கவிதை|19 Comments

19 Comments

  1. இறையடியான் August 24, 2009 at 9:41 am - Reply

    "ஓதலும், தொழுகையும், ஹிஜாபும்
    நிலையில்லா உறவுக்காக அல்ல
    ஒழுக்கத்தை விரும்பும்
    இறைவா எல்லாம்
    உனக்காகவென்று."

    அருமையான‌ வ‌ரிக‌ள்,ச‌கோதரி ஜெஸிலாவுக்கு ர‌ம‌லான் வாழ்த்துக்கள்.

  2. அறிந்து கொண்டேன்
    ஓதலும், தொழுகையும், ஹிஜாபும்
    நிலையில்லா உறவுக்காக அல்ல
    ஒழுக்கத்தை விரும்பும்
    இறைவா எல்லாம்
    உனக்காகவென்று.//

    மாசா அல்லாஹ் ,, நல்ல வரிகள்

  3. சந்தனமுல்லை August 24, 2009 at 9:42 am - Reply

    🙂 நல்லாருக்குங்க! ரமலான் வாழ்த்துகள்!

    //ஹிஜாபில்// – அப்படின்னா?

  4. அபி அப்பா August 24, 2009 at 10:07 am - Reply

    குட் குட் சூப்பர்!!!! ஒரே கவிதைல நோம்பு பத்தி சொல்லிட்டீங்க! நான் அமீரகம் வந்து 18 வருஷம் ஆச்சு! 15 வருடம் இஸ்லாமிய்ய நண்பர்கள் கூடத்தான் இருந்தேன்.

    சகர்ல்ல சாப்பிட்டு பகல் முழூக்க பட்டினி, மாலை நோம்பு திறக்கும் போது ஹயாத் எதிரே இருக்கும் பந்தலில் சாப்பாடு (முடியாது சாப்பிட முடியாது)அந்தமாதம் எனக்கு இனிய மாதம்!!!!!!!!!

  5. ஜெஸிலா August 24, 2009 at 12:22 pm - Reply

    நன்றி அதிரை அபூபக்கர்.
    நன்றி இறையடியான்.
    சந்தனமுல்லை, ஹிஜாப் என்றால் அபாயா (புர்கா மாதிரியான உடை).

    நன்றி அபிஅப்பா. நீங்களும் நோன்பிருப்பதில் மகிழ்ச்சி.

  6. ஜெஸி, அருமையா சொல்லிடீங்க.

    கரமா வாழ்க்கையை நினைவு படுத்தி விட்டது.

  7. ☀நான் ஆதவன்☀ August 25, 2009 at 7:51 am - Reply

    நல்லா இருக்குங்க. முக்கியமா எனக்(கே)கு கவிதை புரியுது 🙂

    ரமலான் வாழ்த்துகள்

  8. நல்ல கவிதை.. சிறுவயதில் இருந்த எண்ணங்களையும் பிறகு ஏற்பட்ட புரிதலையும் அழகாக வடித்துள்ளீர்கள்

  9. கலையரசன்.. August 25, 2009 at 12:13 pm - Reply

    யுரேகா… எனக்கும் புரிஞ்சிடுச்சி யக்கோவ்!!

  10. Information August 26, 2009 at 7:24 am - Reply

    அருமையான கவிதை

  11. RAD MADHAV August 26, 2009 at 10:25 am - Reply

    நன்றாக இருக்கின்றது டீச்சர் அவர்களே…. ரமதான் வாழ்த்துக்கள்….

  12. புருனோ Bruno August 27, 2009 at 7:38 pm - Reply

    இது உங்கள் கருத்து.
    அதை நான் மதிக்கிறேன்

    ஆனால் உங்கள் கருத்து தான் என் கருத்தாக இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்

  13. ஜெஸிலா August 27, 2009 at 7:44 pm - Reply

    சூர்யா, கராமா வாழ்க்கை எப்படியிருந்தது? மிஸ் பண்ணுறீங்களா, இல்ல இப்ப நிம்மதியா இருக்கீங்களா?

    ஆதவன், புரிஞ்சிடுச்சா? அடடா அப்ப இது கவிதையே இல்ல 🙂

    நன்றி செந்தில்.

    கலையரசன், இதுக்கூட புரியலைன்னா எப்படி? 🙂

    இன்பொர்மேஷன் வருகைக்கு நன்றி.

    வாழ்த்துக்கு நன்றி மாதவ்.

    புருனோ, நான் ஏன் அப்படியெல்லாம் விபரீதமா எதிர்பார்க்கப் போறேன்?

  14. புருனோ Bruno August 29, 2009 at 8:48 am - Reply

    மேலே இருக்கும்
    http://www.blogger.com/profile/04442867200829043152 புரோபைல் என் கணக்கு அல்ல

    ஒரு போலியின் வேலை

    ஆரட்டோரியாவை சிம்பொனி என்று மோசடி செய்து ஊரை ஏமாற்றியவ்ர்களை துதிப்பவர்களிடம் இருந்து போலி புரோபைல் உருவாக்குவது போன்ற தரம்தாழ்ந்த செயல்கள் வருவது இயல்பு தானே !!

    சரக்கிருக்கிறவர்கள் ஆஸ்கார் வங்குவார்கள் அல்லது பதிவு எழுதுவார்கள்

    சரக்கில்லாதவர்களுக்கு போலி புரோபைலும் போலி சிம்பொனியும் துனை !!

  15. கரவைக்குரல் August 31, 2009 at 6:01 pm - Reply

    இறையுணர்வோடு வடித்த உங்கள் கவிதை அருமை ஜெஸீலா
    எண்ணங்களின் பதிவு இது
    வாழ்த்துக்கள் ரம்ழானுக்காக

  16. அற்புதமான வரிகள், அர்த்தமுள்ள வாசகங்கள்.

  17. ஜெஸிலா November 16, 2009 at 1:49 pm - Reply

    மிக்க நன்றி சங்கர்.

  18. Nagore Nalamvirumbi-ABDULLAH November 28, 2009 at 4:55 pm - Reply

    அருமையான எதார்த்த வரிகள் .. வாழ்த்துக்கள் சகோதரி
    BY NAGOREFLASH
    http://nagoreflash.blogspot.com/2009/11/3.html

  19. Fathima Sajana January 19, 2011 at 10:58 am - Reply

    masha allh!!! its true

Leave A Comment Cancel reply