குமுறல்

பிறந்த உனை
திறந்த மேனியாய் விடா
சிறந்த துணியால் பொதித்தோம்

வளரும் பருவத்தில்
எமக்கு பிடித்ததெல்லாம்
உடுத்தி பார்த்தோம்

நிமிர்ந்த நடையும்
நேர் கொண்ட பார்வையும்
அஞ்சா மடமும் பயிற்றுவித்தோம்

வளர்ந்த பின்னே
மறைக்க வேண்டியதை மூடவில்லை
அறிவுரைகளை கேட்கவில்லை

பாராட்டும் பத்திரமும்
புகழும் பெயரும்
பொருளோடு சேர்த்துக் கொண்டாய்

அழகிப் போட்டியில் அலங்கரித்தாய்
விளம்பரங்களில் வெளிக்காட்டினாய்
வெட்கத்தை வாடகைக்கு விட்டாய்

எனக்கு பெருமையும் இல்லை
உன் மீது வெறுப்பும் இல்லை
உன்னை பெற்றவளாய் மகிழ்ச்சியும் இல்லை

மன குமுறல்கள் பல இருந்தாலும்
உன் மகிழ்ச்சிக்காக
என் வாய் வளைந்தது புன்னகையாக

By | 2006-04-12T12:36:00+00:00 April 12th, 2006|கவிதை|0 Comments

Leave A Comment