ஸபாவின் அரசி பல்கீஸ், இறைத்தூதர் சுலைமான் (அலை) அவர்களைக் காணும் ஆவலுடன் தனது சேனைகளுடன் புறப்பட்டார். பல நாள் பிரயாணத்திற்குப் பிறகு சுலைமான் (அலை) அவர்களின் நாட்டைச் சென்றடைந்தார்.
ஜின்களில் பலமிக்க ஓர் இஃப்ரீத் கூறியது “இறைவன் நாடினால், நீங்கள் உங்கள் கண் இமைக்கு முன், நீங்கள் உங்கள் இடத்திலிருந்து எழுந்திருப்பதற்குள் அதை நான் உங்களிடம் கொண்டு வந்துவிடுவேன். நான் உங்கள் நம்பிக்கைக்குரியவன்” என்று சொன்னதும், சுலைமான் (அலை) “சரி, கொண்டு வா” என்று சொல்லி வாய் மூடுவதற்குள், “அரசே, உங்களுடைய வலதுப் பக்கம் பாருங்கள்” என்றது இஃப்ரீத்.
அரசி பல்கீஸின் தங்க அரியாசனம் வைரக்கற்கள் பதிக்கப்பட்டு மின்னிக் கொண்டிருந்ததைக் கண்டார்கள். கண் இமைக்கும் நேரத்தில் அரியாசனத்தைக் கொண்டு வந்ததற்காக, இறைவனுக்கு நன்றி செலுத்தினார்கள் சுலைமான் (அலை).
அந்த அரியாசனம் தன்னுடையதுதானா என்று அரசிக்குச் சந்தேகம் வரும் வகையில் அதில் மாற்றங்களை ஏற்படுத்த உத்தரவிட்டார்கள். அரியாசனத்தில் சில அலங்காரங்களை நீக்கியும், சிலவற்றைச் சேர்த்தும் அந்த அழகிய அரியாசனத்தை மிக அழகானதாக மாற்றியமைத்தனர்.
ஒரு மேடையமைத்து அதன் முன்பகுதியில் ஒரு பெரும் குளத்தை ஏற்படுத்தி, அதில் வண்ண மீன்களை விட்டு, குளத்தைக் கண்ணாடி பளிங்கு தளத்தால் மூடச்செய்தார்கள் சுலைமான் (அலை). பார்ப்பதற்கு மூடப்படாத தண்ணீர் நிறைந்த குளத்தைப் போல் அது காட்சியளித்தது. அதற்கு மத்தியில் வேலைப்பாடுகள் நிறைந்த அரசியின் அரியாசனத்தை வைக்க உத்தரவிட்டார்கள். பார்ப்பதற்கு அரியாசனம் குளத்தின் நடுவே இருப்பதுபோல் அமைந்திருந்தது.
இத்தனை ஏற்பாடுகளையும் செய்துவிட்டு, தமது நாட்டிற்குள் வந்து விட்ட ஸபா அரசி பல்கீஸ் தனது அரண்மணைக்கு வரக் காத்திருந்தார்கள் சுலைமான் (அலை).
திருக்குர்ஆன் 27:38-41
Leave A Comment