இந்நாளில் உன் நினைவு…

சின்ன வயதிலிருந்தே எனக்கு நட்பு வட்டம் அதிகம். எல்லோரும் நெருங்கி வந்தாலும் ஒரு அடி தள்ளி இருப்பதே என் வழக்கம்.

நான் ஆறாங்கிளாஸ் படிக்கும் போது எனக்கு முனீரான்னு ஒரு தோழி. என் மீது ரொம்ப பாசமா, அன்பா என்னை அவள் குழந்தை போல பாவிப்பா. ஆனா அதே அன்பும் அக்கறையும் எனக்கு அவளிடமில்லை. நான் சொல்றதெல்லாம் அவ செய்வாள்..ஆனாலும் அந்த நட்போட ஆழம் அப்போ புரியலை. அவளுக்கு என்ன பொருள் கிடைச்சாலும் அது எனக்குக் கொடுத்திடுவா. நானும் அதன் மதிப்பு தெரியாம அவள் நட்பை விளையாட்டா பயன்படுத்திக்கிட்டேன்னுதான் சொல்லணும். நல்ல படிக்கிற அந்த நட்பு வட்டத்துல அவ மட்டும் நல்ல படிக்கமாட்டா. ஆனா அவளை நல்ல படிக்க வைக்கணும்னோ இல்ல சொல்லித்தரணும்னோ எனக்குத் தோன்றியதே இல்ல.

பல வருடம் தொடர்ந்த நட்பு… எப்பவுமே சிரிச்ச முகமா மட்டுமே என்கிட்ட பேசுவா. என்ன சிரிக்க வைத்து பார்க்கவே ஆசைப்படுவா… என் புத்தகத்திற்கு அட்டைப்போட்டு தருவா. நான் முடிக்க மறந்த வீட்டுப் பாடத்தை நினைவுப்படுத்துவா. ஆனா இந்த மாதிரியான விஷயங்களை கூட நான் அவளுக்கு பண்ணதில்லை. ஆறாம் வகுப்பிலிருந்து ஒன்பது வரை அப்படியே போச்சு. ஒன்பதாம் வகுப்பு இறுதிப் பரிட்சையில் வடிகட்டுவார்கள் அப்போதான் பத்தாம் வகுப்பில் ‘ஆல் பாஸ் ரிசல்ட்’ தர முடியும்.

அப்படிச் செய்ததில் முனீரா பாடங்களில் தோல்வி. நாங்களெல்லாம் பத்தாம் வகுப்புக்கு தேர்ச்சிப் பெற அவள் மீண்டும் ஒன்பதாம் வகுப்பில். இதை எதிர்பார்க்காத எனக்குக் குற்ற உணர்வு. அவளுடைய வகுப்பறைக்குச் சென்றேன் – அவளைச் சந்திக்க. தொலைவிலிருந்தாலும் என்னைப் பார்த்தவுடன் முகம் மலரும் முனீரா, முகத்தைத் திருப்பிக் கொண்டாள். என்னிடம் பேசவில்லை. உனக்கு என்ன சந்தேகமென்றாலும் கேள் என்று மிகவும் தாமதமாக கேட்க வந்துள்ளேன் என்பதைப் புரிந்து கொண்டேன். அவளுக்கு ஆறுதல் சொல்ல செல்லவில்லை. அதே நட்பை நாடியே சென்றேன்… ஆனால் அவள் தோல்விக்கு நான் காரணம் என்பதாக அவளுக்குத் தோன்றியது போலும் அதனால் என்னிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை. என்னை எங்குப் பார்த்தாலும் என்னைத் தெரியாதவள் போலவே நடந்து கொண்டாள். அன்றுதான் அவளுடைய நட்பின் ஆழத்தைப் புரிந்து கொண்டேன். நான் எந்த தவறும் செய்யாவிட்டாலும் ‘மன்னிப்பு’ என்று ஒரு கடன் பாக்கியே உள்ளதாக உணர்கிறேன்.

Leave A Comment