அல்லாஹ்வின் அருள்‌‌ பெற்ற குழந்தை

ஆமினாவிற்குப் பிறந்த நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு ஒரே ஒரு வாரம் மட்டும் தாய்ப்பால் புகட்டிவிட்டு, அவருக்குப் பாலூட்டுவதற்காகச் செவிலியைத் தேடிக் கொண்டிருந்தனர்.
அந்தக் கால வழக்கத்தின்படி நகரத்தில் இருக்கும் அரபிகள் கிராமப்புற செவிலிகளை வைத்துத்தான் பாலூட்டுவார்கள். காரணம் நகரத்தில் நோய்கள் அதிகமாக இருக்கும் என்பதால்.
கிராமப்புற செவிலிகள் தாய்ப்பால் தந்தால் குழந்தையின் உடல் உறுதியாகவும் நரம்புகள் வலிமையாகவும் இருக்குமென்று நகரத்துத் தாய்கள் கிராமத்து செவிலிகளைத் தாய்ப்பாலூட்டுவதற்கே அமர்த்துவார்கள்.
தாத்தா அப்துல் முத்தலிப் பேரனுக்காகச் செவிலித்தாயை தேடிச் சென்றது போலவே, ஹலீமா என்பவர் தன் கணவர் குழந்தையுடன் பால் குடிக்கும் குழந்தை வேண்டி புறப்பட்டு வந்தனர். ஹலீமாவின் ஊரில் கடுமையான பஞ்சமாக இருந்தது. பால் குடிக்கும் குழந்தை கிடைத்தால், அந்தக் குழந்தையைப் பராமரிக்கப் போதிய ஊதியம் கிடைக்குமென்று புறப்பட்ட பயணம்.
ஹலீமாவிடம் போதிய பாலில்லை. அவர்களிடமிருந்த பெண் ஒட்டகத்திடமும் ஒரு சொட்டு பால் இல்லை. அதனால் ஹலீமாவின் குழந்தை வழிநெடுகிலும் அழுது கொண்டே வந்தது. இரவு முழுக்கக் குழந்தையின் அழுகை ஓயாததால் அவர்கள் கண் அயரவில்லை.
ஹலீமா தன் குழந்தையுடன் உட்கார்ந்து பிரயாணித்த பெண் கழுதையும் பலவீனமாக இருந்தது. அது மிகவும் மெதுவாக நடந்து அவர்களுடன் சென்ற குழுவினருக்கும் சிரமத்தை ஏற்படுத்தியது. போகிற இடத்தில் தமக்கு ஏதேனும் ஒரு விடிவு பிறக்குமென்று நம்பி அல்லாஹ்வை வேண்டியபடி நகரத்திற்கு வந்தனர். ஹலீமாவுடன் வந்திருந்த மற்ற எல்லாப் பெண்களுக்கும் பால் குடிக்கும் குழந்தைகள் கிடைத்தனர். ஆனால் ஹலீமாவுக்கு எதுவுமே அமையவில்லை.
நபி முஹம்மது (ஸல்) அவர்கள், தந்தை இல்லாத குழந்தை என்பதால் அவர்களிடமிருந்து பெரிய ஊதியம் கிடைக்காதென்று அக்குழந்தையை எடுக்கத் தயங்கினர். மற்ற எல்லாருக்கும் குழந்தைகள் கிடைத்த நிலையில் வேறு வழியின்றி ஹலீமா குழந்தை முஹம்மது (ஸல்) அவர்களை எடுத்துக் கொண்டார்கள்.
அக்குழந்தையின் மூலம் அல்லாஹ் அவர்களுக்கு வளம் தருவான் என்று நம்பினார்கள்.
(ஆதாரம்: சீறா இப்னு ஹிஷாம், அர்ரஹீக் அல்மக்தூம்)
By | 2017-03-25T14:17:20+00:00 September 19th, 2016|0 Comments

Leave A Comment