பொறுமையாளர்களை இறைவன் கைவிட மாட்டான்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சோதனைக் காலத்தில் யூசுப் (அலை) அவர்களின் பொறுமையையும் இறையச்சத்தையும் குறித்து விளக்குவதற்காகத் திருக்குர்ஆனில் யூசுப் (அலை) அவர்களின் அழகிய வரலாற்றை `வஹீ` என்ற அருள்வாக்கு மூலம் இறைவன்அருளினான். 

யூசுப் (அலை) அவர்கள் கண்ட கனவைப் பற்றித் தன் தந்தை யாகூப் (அலை) அவர்களிடம் பகிரும் போது, யாகூப் (அலை) அவர்கள் அந்தக் கனவை குறித்துத் தன்னுடைய மற்ற மகன்களிடம் சொல்ல வேண்டாம் ஏனெனில், ‘மனிதர்களின் விரோதியான ஷைத்தான் அவர்களை வழிகெடுத்து யூசுப்புக்குத் தீங்கிழைக்கச் செய்யத் தூண்டுவான்’ என்று அறிவுறுத்தினார்கள். அதுமட்டுமின்றி “இறைவன்உன்னைத் தேர்ந்தெடுத்து கனவுகளின் விளக்கத்தை உனக்குக் கற்றுக் கொடுத்து, இறைவனுடைய அருளை உன் மீதும், நம்முடைய சந்ததியார் மீதும் முழுமையாகத் தருவான், இதற்கு முன்னர் நம் மூதாதையராகிய இப்ராஹீம் (அலை), இஸ்ஹாக் (அலை) அவர்களுக்குத் தந்தது போல்” என்றார்கள் யூசுப்பிடம் யாகூப் (அலை).

யாகூப் (அலை) பயந்தது போலவே யூசுப் (அலை) அவர்களின் சகோதரர்கள், யூசுப் (அலை) அவர்களுக்கு எதிராக சதித் திட்டம் தீட்டினார்கள். “நம் தந்தை யூசுப் மற்றும் புனியாமின் மீது மிகுந்த பாசத்துடன் இருந்து நமக்குத் தவறு இழைக்கிறார்கள். நாம் யூசுப்பை கொலை செய்ய வேண்டும் அல்லது கண் காணாத தேசத்திற்கு அழைத்துச் சென்று அங்கேயே யூசுப்பை விட்டுவிட்டு வர வேண்டும். அப்போதுதான் தந்தையின் முழுமையான அன்பு நமக்கு மட்டுமே கிடைக்கும்” என்று பொறாமையின் வெளிப்பாட்டினால் தவறு இழைக்கத் துணிந்தனர். சகோதரர்களில் ஒருவர் குறுக்கிட்டு “யூசுப்பை கொலை செய்ய வேண்டாம், அவரை ஏதாவது செய்தே ஆகவேண்டுமென்றால் நாம் அவரை ஓர் ஆழமான பாழ்கிணற்றில் தள்ளிவிட்டுவிடுவோம். அந்த வழியாகச் செல்லும் பிரயாணிகளில் யாராவது அவரை எடுத்துச் சென்றுவிடட்டும்” என்று சொன்னார். அவர் சொன்ன ஆலோசனையின்படியே செய்யலாம் என்று முடிவானது. தங்களது திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளத் தந்தை யாகூப்பிடம் சென்று அவர்கள் ஊருக்கு வெளியே வேட்டைக்குச் செல்வதாகவும் தங்களுடன் யூசுப்பை அனுப்பும்படியும் கேட்டனர்.

யாகூப் (அலை), யூசுப் (அலை) அவர்களை அனுப்ப மறுத்தும் “ஏன் எங்களை யூசுப் விஷயத்தில் நீங்கள் நம்பத் தயாராக இல்லை? அவர் எங்களுடைய அன்புத் தம்பி, எங்களுடன் வந்தால் அவர் மகிழ்ச்சியாக விளையாடுவார், காட்டில் உள்ள பழங்களை உண்ணுவார், இடத்தைச் சுற்றிப் பார்ப்பார். நாங்கள் பத்திரமாகத் திருப்பி அழைத்து வந்துவிடுவோம்” என்று தம்முடைய கள்ளத்தனத்தை மறைத்துக் கொண்டு கேட்டனர். 

யாகூப் (அலை) அவர்களின் மனம் ஒப்புக் கொள்ளாமல் “நீங்கள் அவரைப் பார்க்காத நேரத்தில் ஓநாய் யூசுப்பை பிடித்துத் தின்றுவிட்டால்?” என்று தன்னுடைய தயக்கத்தைச் சொல்ல, “நாங்கள் வளர்ந்த பலசாலியான அண்ணன்கள் இத்தனை பேர் இருக்கும் போது சின்னத் தம்பியை எப்படி ஓநாய்க்கு இரையாக்குவோம்? நாங்கள் கண்டிப்பாகப் பத்திரமாகப் பார்த்துக் கொள்வோம். எங்களை நம்பி அனுப்புங்கள்” என்று மீண்டும் வலியுறுத்தினர்.

யாகூப் (அலை) தன் பத்து மகன்களை நம்புவதைவிட இறைவனையே அதிகம் நம்பினார்கள். `இறைவா உன்னை நம்பி மட்டும் அனுப்புகிறேன்’ என்று மனதில் நினைத்துக் கொண்டு தன் அன்பு மகன் யூசுப்பை அனுப்ப சம்மதித்தார்கள்.
கண்ணுக்குத் தெரியாத இறைவன் மீது உண்மையான நம்பிக்கை வைத்தார்கள். எப்படி இறைவன் தன் மகனுக்கு உதவுவார் என்று அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆயினும் ஏதாவது ஒருவகையில் உதவுவார். ஒவ்வொரு விஷயமும் இறைவன் நன்மையை நாடியே நடத்துகிறான். பொறுமையாளர்களை இறைவன் கைவிடமாட்டான் என்று முழுமையாக நம்பினார்கள் யாகூப் (அலை).

திருக்குர்ஆன் 12:1-14

 

By | 2017-03-25T14:20:34+00:00 May 3rd, 2016|0 Comments

Leave A Comment